ஹாட்லிக் கல்லூரியில் விளையாட்டு உள்ளரங்கு அமைக்க நடவடிக்கை..!
யாழ்ப்பாணம் வடமராட்சி ஹாட்லிக் கல்லூரியின் நீண்டகால தேவையாக காணப்படுகின்ற பொது நோக்கு விளையாட்டு உள்ளரங்கு அமைக்கும் கோரிக்கைக்கு மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் R.சந்திரசேகர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
இதற்கான முன் ஆய்வு வேலையாக நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினரும், வடமராட்சி அபிவிருத்திக் குழு தலைவருமான ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி நேரடியாக சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.
அங்கு பாடசாலை சமூகத்துடன் உரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி
கல்லூரிக்கு ஒரு நவீன Multi-Purpose Sports Hall அமைக்க வேண்டிய தேவை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் விளையாட்டு, உடற்கல்வி மற்றும் பல்வேறு திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு அத்தியாவசியமான இந்தத் திட்டம், வடமராட்சி மாணவர் சமூகத்தின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
கௌரவ அமைச்சர் சந்திரசேகர் அவர்களின் அழைப்பின் பேரில், வடமராட்சி ஹாட்லிக் கல்லூரிக்கு நேரில் விஜயம் செய்து நிலைமைகளை அவதானித்தேன். சுமார் 140 மில்லியன் ரூபா செலவில் அமையவுள்ள இந்த மகத்தான செயற்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டால், ஹாட்லிக் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமன்றி, வடமராட்சிப் பகுதியின் ஒட்டுமொத்த மாணவர் சமூகத்திற்கும் நீண்டகால நன்மைகளை வழங்கும் என குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தியுடன் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் பூலோலியூர் ரமணனும் சென்றிருந்தார்.
