அரசின் நடவடிக்கை முற்றிலும் அபத்தமானது – கம்மன்பில எச்சரிக்கை!
எரிபொருள் விலையை அதிகரித்துள்ள அரசின் நடவடிக்கை முற்றிலும் அபத்தமானது மற்றும் அநீதியானது என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இன்று எத்துல்கோட்டையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கடந்த ஏப்ரல் மாதத்தில் உலகச் சந்தையில் ஏற்பட்ட விலை அதிகரிப்புக்கு ஏற்ப உள்நாட்டில் விலை உயர்த்தப்பட்டதைப் புரிந்துகொள்ள முடிகின்றது.
இருந்தாலும், தற்போதைய விலை அதிகரிப்பு எந்த வகையிலும் நியாயமற்றது.
கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி உலகச் சந்தையில் 114 டொலராகக் காணப்பட்ட பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை, மே 29ஆம் திகதியளவில் 84 டொலர் வரை, அதாவது 30 டொலரால் (26%) வீழ்ச்சியடைந்துள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் இந்த விலைக்குறைப்பின் பலனை மக்களுக்கு வழங்கி வரும் நிலையில், இலங்கையில் மாத்திரம் தலைகீழாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
உலகச் சந்தையில் விலை கூடினாலும் உள்நாட்டில் விலை அதிகரிக்கும்,
உலகச் சந்தையில் விலை குறைந்தாலும் உள்நாட்டில் விலை அதிகரிக்கும்.
ஒரு விசித்திரமான விலை சூத்திரமே இலங்கையில் நடைமுறையில் உள்ளது.
இலங்கை தனக்கான சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை மத்திய கிழக்கிலிருந்து அல்லாமல் சிங்கப்பூரிலிருந்தே இறக்குமதி செய்கிறது.
இதனால் செங்கடல் அல்லது ஹோர்முஸ் நீரிணைப் பகுதிகளில் நிலவும் போர்ச் சூழல் காரணமான கூடுதல் காப்புறுதிக் கட்டணங்கள் இலங்கைக்குப் பொருந்தாது.
இவ்வாறான பின்னணியில், உலகிலேயே மிக அதிக விலைக்கு டீசலை இலங்கை கொள்வனவு செய்துள்ளது.
இதன் பின்னணியில் அரசியல்வாதிகள் பெற்றுக்கொண்ட பாரிய ஊழல் மற்றும் தரகுப் பணம் ஒளிந்திருக்கின்றது.
இந்த ஊழல் நட்டத்தை மக்களின் தலையில் சுமத்தாமல், ஜே.வி.பி கட்சியின் பெலவத்தை தலைமையக நிதி மூலமே அரசாங்கம் ஈடுசெய்ய வேண்டும்.
இதேவேளை, கலைஞர் சங்கீத் விஜேசூரிய தனது பிரித்தானிய நண்பர் மூலம் நாட்டிற்குக் கொண்டுவந்த 23 மில்லியன் டொலர் நன்கொடையை, ‘சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையின்படி டொலர் நன்கொடைகளை ஏற்க முடியாது’ எனக் கூறி அரசு நிராகரித்துள்ளது.
தற்போதைய உத்தியோகபூர்வ வர்த்தமானியின்படி நிதி அமைச்சர் பதவியை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவே வகிக்கும் சூழலில், சங்கீத் விஜேசூரியவுக்கு ‘நிதி அமைச்சர்’ என ஜனாதிபதியால் அறிமுகப்படுத்தப்பட்ட அந்த மர்ம நபர் யார் என்று கேள்வி எழுப்புகின்றேன்.
அதில் வெளிநாட்டு நன்கொடைகளைத் தடை செய்யும் எந்தவொரு நிபந்தனையும் இல்லை.