தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலம் மற்றும் அது புதைக்கப்பட்ட இடம் தொடர்பாக முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்துக்களுக்குத் தம்மால் பதில் கூறவோ அல்லது பொறுப்பேற்கவோ முடியாது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தை நேற்று திறந்து வைத்த பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய சர்ச்சைமிக்க கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் திட்டவட்டமாக அறிவித்தார்.
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரது சடலம் புதைக்கப்பட்ட துல்லியமான இடம் தனக்குத் தெரியும் என்றும், ஆனால் பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களினால் அந்த இடத்தைத் தான் ஒருபோதும் பகிரங்கமாக வெளிப்படுத்த மாட்டேன் என்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அண்மையில் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். இக்கருத்து அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இது குறித்து யாழ்ப்பாணத்தில் வைத்து ரில்வின் சில்வாவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அவர் வழங்கிய நேரடிப் பதில் வருமாறு:-
“சரத் பொன்சேகா கூறியுள்ள இந்த விசித்திரமான கருத்துக்கள் தொடர்பில் எமது கட்சிக்கோ அல்லது அரசுக்கோ எதுவும் தெரியாது. மிக முக்கியமாக, சரத் பொன்சேகா என்பவர் தற்போதைய அரசின் பிரதிநிதி அல்லர். அவர் ஒரு முன்னாள் இராணுவத் தளபதி மாத்திரமே ஆவார்.
அவர் அரசியல் அரங்கில் அவ்வப்போது இவ்வாறான பரபரப்பான கருத்துக்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். எனவே, தனிப்பட்ட முறையில் அவர் வெளியிடும் இத்தகைய கருத்துக்களுக்கு நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது. இது குறித்து எங்களால் அரச தரப்பிலிருந்து எந்தவொரு விளக்கத்தையும் வழங்கவும் முடியாது.” – என்றார்.
யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், தற்போதைய புதிய அரசின் கீழ் இவ்வாறான பழைய போர்க்காலச் சம்பவங்களை மீண்டும் கிளறி அரசியல் இலாபம் தேட முற்படும் கருத்துக்களைத் தேசிய மக்கள் சக்தி ஒருபோதும் ஊக்குவிக்காது என்றும் ரில்வின் சில்வா இதன்போது மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார்.










