நாட்டில் தற்சமயம் நிலவி வரும் உண்மையான பொருளாதார நிலவரங்கள், டொலர் கையிருப்பின் எதார்த்தம் மற்றும் வருங்காலக் கடன் சவால்கள் குறித்து நாட்டின் 220 இலட்சம் குடிமக்களும் விழிப்போடு சரியான புரிதலைக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.
குளியாப்பிட்டிய நகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாராட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் நாட்டின் நிதி நிலைவரம் மற்றும் அரச சேவை குறித்து மேற்கண்டவாறு கூறினார்.
பொருளியல் கோட்பாடுகளின்படி ஒரு நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பானது, குறைந்தபட்சம் மூன்று மாத கால இறக்குமதிச் செலவுகளை ஈடுசெய்யக்கூடியதாக அமைய வேண்டும். தற்சமயம் இலங்கையிடம் 7 பில்லியன் டொலர் கையிருப்பு இருப்பதாகக் கூறப்படும் தரவுகளின் உண்மையான நிலையைச் சஜித் பிரேமதாஸ பகுப்பாய்வு செய்தார்.
“தற்போதைய நிலவரப்படி ஒவ்வொரு மாதமும் இறக்குமதிக்காக 2 பில்லியன் டொலர் ஒதுக்கப்படுகின்றது.
ஒட்டுமொத்த 7 பில்லியன் டொலர் இருப்பில், 1.2 பில்லியன் டொலர் பெறுமதியான தொகை பயன்படுத்த முடியாத ‘சீன யுவான்’ நாணயமாகவே முடங்கிக் காணப்படுகின்றது. இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் மேலும் அதிகரித்தால், இந்த இருப்பின் தாங்குதிறன் வெகுவாகக் குறையும். அத்துடன், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் நீடித்து அங்கு பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டால், அந்நாடுகளில் இருந்து இலங்கைக்குக் கிடைக்கும் வெளிநாட்டு அனுப்பீடுகள் பெருமளவில் வீழ்ச்சியடையும்.” – என்றார் சஜித்.
நாட்டின் எதிர்கால நிதி நெருக்கடி குறித்து எச்சரித்த அவர், தற்போதைய சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடு 2027 மார்ச் மாதத்துடன் நிறைவுக்கு வருகின்றது என்றார்.
“அதன் பின்னர், 2028 ஆம் ஆண்டு முதல் சாதாரண மாதாந்த இறக்குமதிச் செலவுகளுக்கு மேலதிகமாக, ஆண்டுதோறும் 3 பில்லியன் முதல் 3.5 பில்லியன் டொலர் வரையான வெளிநாட்டுக் கடன்களை மறுசீரமைப்பின்படி திருப்பிச் செலுத்த வேண்டிய பாரிய பொறுப்பு நாட்டுக்கு உண்டு. எனவே, வெறுமனே இருப்பைக் காட்டி ஏமாற்றாமல், ஏற்றுமதித் துறையை வலுப்படுத்தி, நேரடி அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் மிகக் கூடிய அவதானத்தைச் செலுத்த வேண்டும்.” – என்றார்.
தற்போது நாட்டில் வறுமை அதிகரித்து வருவதுடன், பெரும்பாலான குடும்பங்களில் செலவுக்கு ஏற்ற வருமானம் இல்லாத நெருக்கடி நிலை காணப்படுகின்றது என்றும், இந்தச் சவாலான தருணத்தில் 220 இலட்சம் மக்களையும் பாதுகாப்பதே பிரதான இலக்காக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மக்களுக்கு மிக நெருக்கமான சேவையை வழங்கும் உள்ளூராட்சி மன்றங்களின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் தன்னலமற்ற அர்ப்பணிப்பினை எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது வெகுவாகப் பாராட்டினார்.
“1971 மற்றும் 1988 – 1989 கலவரக் காலங்களிலும், 30 ஆண்டுகாலப் பயங்கரவாத யுத்த காலத்திலும் நாட்டின் மனித மற்றும் பொருளாதார வளங்கள் அழிந்தபோது, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைக் கட்டமைப்பு மூலமாக அடிமட்ட மக்களுக்குரிய சேவைகளை இந்த அதிகாரிகளே பாதுகாத்தனர்.
நாட்டின் அரச சேவையானது அரசியல் அழுத்தங்களில் இருந்து முற்றாக விடுபட்டு, வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் சுயாதீனமாக இயங்க வேண்டும். ஊழியர்களின் நியமனங்கள் மற்றும் உயர்வுகள் அரசியல் செல்வாக்கின்றி திறமை, ஆற்றல் மற்றும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே அமைய வேண்டும்.
நாடே பாரதூரமான சவால்களை எதிர்கொள்ளும் இவ்வேளையில், மக்களின் அன்றாடக் கஷ்டங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அரச ஊழியர்கள் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும்.” – என்றும் சஜித் பிரேமதாஸ தனது உரையில் கேட்டுக்கொண்டார்.



















