பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படாது – ஜனாதிபதி உறுதி!
2022ஆம் ஆண்டைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வெளிப்புறக் காரணிகளால் எழுந்துள்ள சவால்களைக் கையாள்வதற்கான முழுமையான ஆளுமை தற்போதைய அரசிடம் உள்ளது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்
அம்பாறை, நிந்தவூர் கலாசார நிலையத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருள் இறக்குமதிக்கான டொலரின் மதிப்பு உயர்ந்துள்ளதுடன், இறக்குமதிப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.
சுற்றுலாத்துறை மற்றும் சில ஏற்றுமதி வருமானங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், ரூபாவுக்கு நிகரான டொலரின் பெறுமதி தற்போது சற்று உயர்ந்து வருகின்றது.
பலர் இதனை 2022ஆம் ஆண்டு காலகட்டத்துடன் ஒப்பிட்டுக் கருத்து வெளியிடுகின்றனர்.
ஆனால், 2022இல் நம்மிடம் ரூபாவும் இருக்கவில்லை, மத்திய வங்கியில் டொலரும் இருக்கவில்லை.
அன்று மத்திய வங்கியில் வெறும் 50 மில்லியன் டொலர்களே இருந்தது.
ஆனால் இன்று சந்தையில் டொலர் அழுத்தம் நிலவினாலும், மத்திய வங்கியிடம் கிட்டத்தட்ட 7 ஆயிரம் மில்லியன் டொலர் கையிருப்பு உள்ளது.
இன்னும் சில தினங்களில் மேலும் 700 மில்லியன் டொலர்கள் கிடைக்கவுள்ளன.
அன்று நிலவியதைப் போல நாட்டில் எரிபொருள், எரிவாயு, பால்மா அல்லது உரங்களுக்கு எந்தவொரு தட்டுப்பாடும் ஏற்படுவதற்கு இந்த அரசு ஒருபோதும் இடமளிக்காது என நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
‘டித்வா’ சூறாவளியால் சுனாமியை விடப் பாரிய பொருளாதார இழப்பு ஏற்பட்ட போதும், மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை நாம் வழங்கினோம்.
அதேபோன்று, எமது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட இந்த சர்வதேச அரசியல் சவாலையும் நாம் வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்வோம்.
கோட்டாபயவுக்கே நடந்ததே இவருக்கும் நடக்கும் எனப் பொய்ப் பிரசாரம் செய்பவர்களின் கனவு பலிக்காது.
தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மக்கள் வழங்கிய ஆணையின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
கடந்த காலத்தில் நிலவிய அவநம்பிக்கை மற்றும் இனவாத அரசியலைத் தோற்கடித்து, சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சமின்றி வாழும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
5 வருடங்கள் பணியாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியச் சலுகை முற்றாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரச செலவில் வழங்கப்பட்ட பிரம்மாண்ட வீடுகள், வாகனங்கள் மற்றும் மின், நீர்க் கட்டணச் சலுகைகள் சட்டபூர்வமாக நிறுத்தப்பட்டுள்ளன.
பணம், அதிகாரம், அந்தஸ்து பேதமின்றி சட்டம் அனைவருக்கும் சமமாக அமுல்படுத்தப்படுகின்றது. வரலாற்றில் முதன்முறையாக முன்னாள் ஜனாதிபதிகள் நீதிமன்றத்துக்கும், இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கும் முன்னிலையாக்கப்பட்டுள்ளனர்.
பஸ்களில் ஆட்களைத் திரட்டி வந்து கூச்சலிடுவதற்காகச் சட்ட நடவடிக்கைகள் மாற்றப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.