புற்றரைக்கு தீ மூட்டிய விசமிகள்.!
அல்லைப்பிட்டி – மண்கும்பான் இடையே நண்டு தொழிற்சாலையின் முன்பகுதியிலுள்ள தரிசுக் காணிகளில் காணப்பட்ட புதர்களுக்கு விசமிகள் தீ மூட்டியதில் பாரியளவிலான புற்றரைகள் எரிந்து நாசமாகியுள்ளன. குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.
அத்துடன் இந்த தீயினால் ஏற்பட்ட புகையின் காரணமாக வீதியால் மக்கள் செல்லமுடியாத நிலையும் உருவானது.
ஊர்காவற்றுறை – யாழ்ப்பாணம் வீதியின் பிரதான போக்குவரத்து , வீதியில் இந்த நாசகார வேலையை விசமிகள் மேற்கொண்டதை சமூக நலன்விரும்பிகள் பொலிசாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து யாழ். மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தற்போது நிலவும் வெப்பமான காலநிலையால் நீர்வளம் வேகமாக வற்றி வரும் நிலையில் புற்களும் சருகாகிவரும் நிலை காணப்படுகின்றது.
இதனால் கால்நடைகளின் உணவுத் தேவையை நிவர்த்தி செய்யும் புற்றரைகளும் அற்றுவரும் நிலையில் இவ்வாறு விசமத்தனமாக தீ மூட்டல்களால் அவை முற்றாக அழிவுறும் பரிதாபநிலை ஏற்படுகின்றது.
எனவே இவ்வாறான தீமூட்டல் செயல்களை செய்வோர் கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.


