மீண்டும் தலையெடுக்கும் மலேரியா ; வடமாகாணத்தில் ஒருவர் மரணம்!
கடந்த ஆண்டில் வடக்கு மாகாணத்தில் 5 பேர் மலேரியா தொற்றுக்கு உள்ளாகி இருந்ததுடன் ஒருவர் மரணடைந்துள்ளார். இவ்வாண்டும் இது வரை ஒருவர் தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளார் என மலேரியா தடை இயக்கத்தின் வவுனியா பிராந்திய வைத்திய அதிகாரி வைத்தியர் கே. நிசாந்தினி தெரிவித்தார்.
வவுனியா மலேரியா தடை இயக்கத்தின் பிராந்திய அலுவலகத்தில் இன்று ஏப்ரல் 25 ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலக மலேரியா தினம் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை 25 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது. மலேரியா உலக அளவில் இன்றும் முக்கிய பொது சுகாதார பிரச்சனையாகவுள்ளது. 2024 ஆம் ஆண்டு உலக அளவில் 282 மில்லியன் நோய் தாக்கங்களும், 6 இலட்சம் மரணங்களும் பதிவாகியுள்ளன.
இதில் 95 வீதமான மரணங்கள் ஆபிரிக்க பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ளது. ஆபிரிக்கா, தென்னாசியா, தென் அமெரிக்கா பகுதிகளில் இன்னும் மலேரியா தொற்று காணப்படுகிறது.
இலங்கையிலும் முன்னர் மலேரியா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. 1934, 1935 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் ஒரு இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். அவற்றில் மரணங்களும் ஏற்பட்டன. தடுக்கும் நோக்கில் மலேரியா ஒழிப்பு திட்டம் 1955 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
இதன் விளைவாக 1962 ஆம் ஆண்டு மிகக் குறைந்த நோய் தாக்கமே இனங்காணப்பட்டது. இருந்த போதிலும் தொடர்ச்சியான கண்காணிப்பு, கவனக் குறைவு காரணமாக மீண்டும் 1968 இல் நோய் பரம்பல் ஏற்பட்டது.