ரணிலின் மனைவியிடம் சி.ஐ.டி. விசாரணை:ஐக்கிய தேசியக் கட்சியினர் கடும் கண்டனம்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்குக் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் திடீர் வருகை தந்து, அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன வெளியிட்டுள்ள அறிக்கையில், இதய அறுவை சிகிச்சைக்கு பின்னர் உடல்நலக் குறைவில் இருந்து மீண்டு வரும் முன்னாள் ஜனாதிபதியை பராமரித்து வரும் நிலையில், மனைவியுமான பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவும் உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், சி.ஐ.டி. அதிகாரிகள் திடீரென இல்லத்துக்கு வருகை தந்தமை கவலைக்கிடமானது எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், அரசுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கில் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவோ என்ற சந்தேகத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த விசாரணைக்கு யாருடைய அறிவுறுத்தலின் பேரில் அதிகாரிகள் அனுப்பப்பட்டனர் என்பது தொடர்பிலும் ஐ.தே.க. கேள்வி எழுப்பியுள்ளது.
இதேவேளை, இலண்டனில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி மேற்கொண்ட பயண செலவுகளுக்கு அரச நிதி முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.