மன்னார் நகரசபை உறுப்பினர் பெண்களை இழிவுபடுத்தி சமூக வலைத்தளத்தில் பதிவு;மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு!
மன்னார் நகர சபை அமர்வின் போது எடுக்கப்பட்ட காணொளி ஒன்றுக்காக, சம்பந்தப்பட்ட நபரின் மனைவி குறித்து நகரசபை உறுப்பினர் ஒருவர் வெளியிட்ட அவதூறான கருத்து தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
நேற்று 23 ஆம் திகதி நடைபெற்ற மன்னார் நகரசபை அமர்வில் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. சபையினுள் முன்னாள் மற்றும் இந்நாள் தவிசாளர் களுக்கு இடையே கடும் வாக்குவாதம் நிலவியது.
இவ்வாறான பரபரப்பான சூழலுக்கு மத்தியில், நகரசபை உறுப்பினர் ஒருவர் ‘முட்டை பற்றீஸ்’ சாப்பிட்டுக் கொண்டிருந்த காட்சி சமூக வலைத்தளங்களில் பதி விடப்பட்டிருந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட நகரசபை உறுப்பினரும் குறித்த பதிவுக்கு நகைச்சுவையாக பதில் வழங்கியிருந்தார்.
இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி நகைச்சுவையாகப் பேசப்பட்ட நிலையில், இதனால் ஆத்திரமடைந்த குறித்த நகரசபை உறுப்பினர், அக் காணொளியைப் பதிவிட்ட நபரை தனிப்பட்ட ரீதியில் தாக்கும் நோக்கில் ஒரு பதிவை இட்டிருந்தார். அதில், அந்த நபரின் மனைவி குறித்து மிகவும் இழிவான மற்றும் தரம் தாழ்ந்த கருத்துக்களைப் பகிர்ந்திருந்தார்.
பொதுப் பதவியில் இருக்கும் ஒரு பிரதிநிதி, எவ்வித சம்பந்தமும் இல்லாத ஒரு பெண்ணைப் பொதுவெளியில் இழிவு படுத்தியது மன்னார் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவத்தை தொடர்ந்து, பெண் ஊடகவியலாளர்களும் சிவில் அமைப்பினரும் குறித்த உறுப்பினருக்கு எதிராகக் கடும் கண்டனங்களை முன்வைத்து வருகின்றனர்.
விமர்சனம் செய்தவரை எதிர்கொள்ள முடியாத நிலையில், அவரது வீட்டுப் பெண்ணை இழிவு படுத்துவது ஒரு கோழைத்தனமான செயல் எனவும், இது ஒரு தவறான முன்மாதிரி எனவும் விமர்சிக்கப்படுகிறது.
பெண்களின் வாக்குகளையும் பெற்று மக்கள் பிரதிநிதியாக ஒருவர், அதே பெண்களைக் கேவலமாக பேசுவது அந்தப் பதவிக்கு செய்யும் துரோகம் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.