பயணிகளிடமிருந்து அதிக கட்டணம் அறவிட்ட 80 பேருந்துகளுக்கு தண்டப்பணம் விதிப்பு.!
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பயணிகளிடமிருந்து அதிக கட்டணம் அறவிட்ட 80 பேருந்துகளுக்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தண்டப்பணம் விதித்துள்ளது.
இது தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நடமாடும் பேருந்து ஆய்வகப் பிரிவின் தலைவர் ரோஹன வட்டகே தெரிவிக்கையில்,
இம்மாதம் 08 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை மொத்தம் 680 பேருந்துகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் 80 பேருந்துகள் பயணிகளிடம் அதிக கட்டணம் அறவிட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
அதிகமாக அறிவிட்டப்பட்ட தொகைகள் பயணிகளுக்கு திருப்பி வழங்கப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட பேருந்து நடத்துநர்களுக்கு தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று சனிக்கிழமை (18) மாத்திரம் சுமார் 150 பேருந்துகள் பரிசோதிக்கப்பட்டதில், 12 பேருந்துகள் அதிக கட்டணம் அறவிட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை தொடரும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஹன்வெல்ல – களுகல பகுதியில் உள்ள ஹைலெவல் வீதியிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.