உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வடக்கு ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில்  பல தீர்மானம் முன் வைப்பு!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
34 பார்வைகள்

மன்னார் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் வழங்கப்பட்ட மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரங்களை உடனடியாகத் தற்காலிகமாக இடை நிறுத்துவதற்கும், அந்தப் பத்திரங்கள் வழங்கப்பட்டமை தொடர்பில் முன்வைக்கப்படும் மிகப்பெரிய முறைகேடுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (C.I.D.) விசாரணைகளுக்கு பாரப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன்  தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் மணல் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பான மாவட்ட மட்டத்திலான விசேட கூட்டம், மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன் தலைமையில் இன்று (18) சனிக்கிழமை காலை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான  உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.

 மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் குறித்த கூட்டம் இடம் பெற்றது.

மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வு மற்றும் விநியோகம் ஆகியவற்றுடன் தொடர்புடைய அரச திணைக்களங்களுக்கு இடையில் முறையான ஒருங்கிணைப்பு இல்லாமையே பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. வழங்கப்பட்ட சில அனுமதிப்பத்திரங்கள் தொடர்பிலும் சந்தேகங்கள் நிலவுகின்றன. மணல் அகழ்வு செய்யப்பட்ட இடங்கள் மிக மோசமான சுற்றாடல் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக   அமைய வேண்டும் என அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய  ஆளுநர் அவர்கள், நான் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிய காலத்திலிருந்தே மணல் உள்ளிட்ட கனிய வளங்களின் அகழ்வு மற்றும் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதற்கு மாவட்ட மட்டத்திலான குழுவொன்று அவசியம் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளேன். 

ஆனால், அப்போதிருந்த சில அரசியல்வாதிகளின் பின்புலத்துடன் இயங்கிய சில அரச நிறுவனங்கள் இதற்கு ஒத்துழைக்க மறுத்தன. நான் ஆளுநராக பதவியேற்றது முதல் மணல் விநியோகம் தொடர்பான விடயங்களை மிக நுணுக்கமாக அவதானித்து வருகின்றேன்.

ஈவு இரக்கமற்ற விதத்தில் இங்கு மணல் மாபியாக்கள் செயற்பட்டு வருகின்றனர். ஒரு சில குழுக்களே மணலுக்கான விலையைத் தீர்மானிக்கின்றன. இவர்களுக்குச் சில அதிகாரிகளும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.

 அரசாங்கக் காணிகளில் அகழப்படும் மணலை மக்களுக்கு நியாயமான விலையில் வழங்கினாலும் பரவாயில்லை.ஆனால் இவர்கள் ஒரு டிப்பர்  மணல் விற்பனையில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை லாபம் உழைக்கின்றனர். குறிப்பிட்ட ஒரே குழுவினரே அகழ்வு மற்றும் விநியோகத்துக்கான அனுமதிப்பத்திரங்களை ஏகபோகமாகப் பெற்றுக்கொள்கின்றனர். 

அவர்களுக்கு வழங்குவதற்கே சில அதிகாரிகளும் விரும்புகின்றனர். இந்த மோசமான செயற்பாட்டால் அரசாங்கத்துக்குப் நிதியிழப்பு ஏற்படுகிறது.

மக்களுக்கு நியாயமான விலையில் மணல் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் தான் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவரை அழைத்து விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தேன். 

அந்தக் கூட்டத்தின் தீர்மானங்களுக்கு அமைவாகவே இன்று இந்த மாவட்ட மட்டக் கூட்டம் நடத்தப்படுகிறது. மணல் விநியோகம் மற்றும் மணல் விலை ஆகியவற்றை மாவட்டச் செயலாளர் தலைமையிலான இந்தக் கூட்டத்திலேயே தீர்மானிக்க வேண்டும் என ஆளுநர் செயலகத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அனைத்து திணைக்களங்களும் நிபந்தனையின்றி ஒத்துழைக்க வேண்டும், என்று தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர்  உபாலி சமரசிங்க, இங்கு நடப்பது சாதாரண மணல் வியாபாரம் அல்ல. ஒரு திட்டமிட்ட மணல் மாபியா. கடந்த ஒன்றரை வருடங்களாக இந்த மணல் மாபியாக்களின் பின்னால் இருப்பவர்கள் யார், அவர்களுக்கு யார் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார்கள் என்பதை நான் தீவிரமாக அவதானித்து வருகின்றேன். அவர்கள் இனியாவது இவற்றைக் கைவிட வேண்டும்; இல்லையெனில், நாங்கள் அதனை நிரந்தரமாக நிறுத்துவோம். நாங்கள் இந்த விடயத்தைச் சீர்செய்யவே முயற்சிக்கின்றோம். இதற்கு இங்குள்ள அனைத்துத் திணைக்களங்களும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒத்துழைக்க மறுத்தால், மாண்புமிகு ஜனாதிபதியுடன் இணைந்து அமைச்சு மட்டத்தில் எடுக்க வேண்டிய மிகக் கடுமையான நடவடிக்கைகளை நாம் எடுப்போம். இங்குள்ள சில அதிகாரிகளுக்கு ‘டிப்பரால் இடித்துக் கொலை செய்து விடுவார்களோ’ என்ற அச்சமும் காணப்படுகின்றது.

மணல் அனுமதி தொடர்பான அதிகாரங்கள் தமக்கு மட்டுமே உள்ளதாகக் கருதி எந்த ஒரு திணைக்களமும் தான்தோன்றித்தனமாக செயற்பட முடியாது. சகலரும் ஒருங்கிணைந்து தான் செயல்பட வேண்டும். வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களை தொகுத்துப் பார்த்தால், அவை ஒரு சிலரின் பெயர்களில் தான் முடங்கியுள்ளன. இங்கு அனுமதி வழங்காவிட்டால் கொழும்பில் சென்று அனுமதியைப் பெற்று வருகின்றார்கள். எதிர்வரும் காலங்களில் மாவட்ட மட்டக் கூட்டத்தில்தான் இவை அனைத்தும் தீர்மானிக்கப்பட்டு செயற்படுத்தப்படும், என்றார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் வழங்கப்பட்ட 5 அனுமதிப்பத்திரங்கள் ஊடாக அண்ணளவாக 9,000 கியூப் மணல் அகழ்வுக்கான அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் கடந்த ஏப்ரல் 7ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட கள ஆய்வு தொடர்பான அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டன. இது தொடர்பில் நீண்ட வாதப் பிரதிவாதங்களும் இடம்பெற்றன.

‘டித்வா’ இயற்கைப் பேரிடரால் குவிக்கப்பட்ட மணலை அகற்றுதல் என்ற அடிப்படையிலேயே குறித்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், அவற்றைப் பயன்படுத்தி முறைகேடுகள் நடை பெற்றுள்ளமை அம்பலமாகியுள்ளது. கள ஆய்வின் போது, பல்வேறு இடங்களில் சட்டவிரோத மற்றும் கட்டுப்பாடற்ற மணல் அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளமை தெளிவாகக் கண்டறியப்பட்டது. அனுமதிக்கப்பட்ட அளவை மீறி மணல் அகழப்பட்டதுடன், அனுமதி வழங்கப்படாத பகுதிகளிலும் இயந்திரங்களை பயன்படுத்தி அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் விளைவாக நில அமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டு, மரங்களின் வேர்கள் வெளிப்பட்டு அவை சரிந்து விழும் அபாய நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, ஆற்றங்கரைப் பகுதிகளில் ஏற்பட்ட சேதங்கள் காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாயங்கள் அதிகரித்துள்ளன. மேலும், பாடசாலைகள் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அண்மையில் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், மனிதப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கள ஆய்வு அறிக்கைகளுக்கும் வழங்கப்பட்ட அனுமதிகளுக்கும் இடையில் பாரிய முரண்பாடுகள் காணப்பட்டதுடன், தொடர்ச்சியான கண்காணிப்புக் குறைபாடுகளும் பகிரங்கமாக வெளிப்பட்டுள்ளன.

இவற்றின் அடிப்படையில், சட்டவிரோதமாக வழங்கப்பட்ட அல்லது தவறாகப் பயன்படுத்தப்பட்ட மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்களை உடனடியாக இரத்துச் செய்தல், சேதமடைந்த நிலங்களை மீளமைத்தல், ஆற்றங்கரை மற்றும் சுற்றாடலைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் போன்ற பல காத்திரமான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

இதன்போது பதிலளித்த புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் மாவட்டப் பொறியியலாளர், தான் மாவட்டத்தில் பதவியேற்பதற்கு முன்னரே சில கள ஆய்வுகள் நடந்ததாகவும், முன்னைய பொறியியலாளரே அந்த அனுமதிகளை வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.

இதன் போது குறுக்கிட்ட பிரதி அமைச்சர், இங்குள்ள அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை நீங்கள் ஒன்றும் தெரியாத சிறு பிள்ளைகள் என நினைக்க வேண்டாம். சுற்றறிக்கைகளுக்குள் ஒளிந்துகொண்டு தப்பிக்க முடியும் எனவும் கனவு காண வேண்டாம். இதயசுத்தியுடன் உண்மையைப் பேசுங்கள்; பொறுப்பற்றுக் கதைக்க வேண்டாம், எனக் கடுமையாக எச்சரித்தார்.

தொடர்ந்து ஆளுநர் அவர்கள், ‘இந்த அனுமதிப்பத்திரங்களை பயன்படுத்தி இவ்வளவு முறைகேடுகள் நடந்துள்ளன என்பது உறுதியான பின்னர், அவற்றை ஏன் உடனடியாக இரத்துச் செய்யவில்லை?’ எனக் கேள்வி எழுப்பினார். அதற்குக் குறித்த பொறியியலாளர், ‘இந்தக் கூட்டத்தில் முடிவெடுப்பதற்காகவே காத்திருந்தேன்’ எனப் பதிலளித்தார்.

இதற்குப் பதிலளித்த ஆளுநர், ‘அனுமதி வழங்கும் போது எவ்வித கலந்தாலோசனையுமின்றித் தன்னிச்சையாக வழங்குகின்றீர்கள்; இரத்துச் செய்வதற்கு மாத்திரம் ஏன் இந்தக் குழுவின் அனுமதியை எதிர்பார்க்கின்றீர்கள்?’ எனத் திருப்பிக் கேட்டார்.

தமது கள ஆய்வின் போது குறித்த மாவட்டப் பொறியியலாளரும் இணைந்திருந்தார் என்பதைச் சுட்டிக்காட்டிய மன்னார் மாவட்ட மேலதிக மாவட்டச் செயலாளர், ‘அவ்வளவு முறைகேடுகள் நடைபெற்றதை நேரில் கண்ட பின்னரும் அனுமதியை இரத்துச் செய்யாமல் இருப்பதன் பின்னணி என்ன?’ என வினவினார். இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்யப்பட்டு முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என ஆளுநர் அறிவித்தார்.

இந்த விசேட கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள், மாகாண நீர்ப்பாசன திணைக்களப் பணிப்பாளர், நகர சபைத் தவிசாளர், பிரதேச சபைத் தவிசாளர்கள் மற்றும் உரிய அரச திணைக்களங்களின் அதிகாரிகள் என பலரும் பங்கேற்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

63 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

74 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

27 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0