“தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதியில் முன்னாள் வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி ஊழல் செய்தார் என்று எந்தவொரு விசாரணையிலும் உறுதிப்படுத்தப்படவில்லை” என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று மாலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.
நிலக்கரி இறக்குமதி விவகாரத்தில் குமார ஜயக்கொடி ஊழல் புரிந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அரச கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை நிராகரித்துள்ளது என்றும் அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், பொது நிறுவனங்கள் பற்றிய நாடாளுமன்றக் குழு நடத்திய ஆய்வுகளிலும் முறைகேடுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“வலுசக்தி அமைச்சுப் பதவியை வகித்திருந்த குமார ஜயக்கொடி மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது கூட, அவர் ஊழல் புரிந்தார் என்று ஆதாரபூர்வமான கருத்துக்கள் எவையும் முன்வைக்கப்படவில்லை. இருப்பினும், இந்த விவகாரத்தில் வெளிப்படையான மற்றும் துரிதமான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு வசதியாக, அவர் தனது வலுசக்தி அமைச்சர் பதவியிலிருந்து தாமாகவே முன்வந்து விலகியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து ஆராய ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்தும் விசாரணைகளுக்கும், இந்த விசேட ஆணைக்குழுவின் பணிகளுக்கும் இடையே எந்தவித முரண்பாடுகளும் ஏற்படாது.” – என்றார்.
நிலக்கரி இறக்குமதி முறைகேடுகள் குறித்து ஏதேனும் தகவல்கள் இருந்தால், அவற்றை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்து விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அமைச்சர் விஜித ஹேரத் இதன்போது அழைப்பு விடுத்தார்.
அமைச்சராக இருந்த ஒருவர், தன் மீதான விசாரணைகள் நேர்மையாக நடப்பதற்காகப் பதவியைத் துறந்திருப்பது பாராட்டுக்குரியது என்று தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத், உண்மை நிலை விரைவில் நாட்டுக்கு வெளிப்படுத்தப்படும் என்றும் கூறினார்.










