நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.!
கித்துல்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெலிகம பகுதியில் களனி கங்கையில் நீராடிக்கொண்டிருந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் ஹட்டன், மொரஹேனகம பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை (15) குறித்த நபர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய, கித்துல்கல பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உயிர் காப்புப் பிரிவினர் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இதன்போது, ஆற்றின் ஆழமான பகுதியிலிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் தனது உறவினர்கள் சிலருடன் குறித்த பகுதியில் நீராடச் சென்ற போதே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் கித்துல்கல பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.