நண்பர்களுக்குள் திடீர் மோதல்! தலையில் அடிபட்டு ஒருவர் பலி!! – களுத்துறையில் புத்தாண்டு மதுபான விருந்தில் விபரீதம்
களுத்துறை, பாயகலை பகுதியில் புத்தாண்டு மதுபான விருந்தின் போது ஏற்பட்ட மோதலில், நபர் ஒருவர் மரப் பலகையால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாயகலை, விஹாரகந்த பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு புத்தாண்டு மதுபான விருந்து இடம்பெற்றுள்ளது. இதன்போது அங்கிருந்த நண்பர்களுக்கு இடையே திடீரென ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது.
இந்த மோதல் முற்றிய நிலையில், பாயகலை ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள காய்கறி விற்பனை நிலையத்துக்கு முன்பாக வைத்து மேற்படி நபர் பலமாகத் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த அவர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பாயகலை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பாயகலை பொலிஸார், சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.