கணேமுல்ல சஞ்சீவ கொ*லை; கைதான சட்டத்தரணியின் வங்கிக் கணக்குகள் தொடர்பில் வெளிவந்த விடயம்.!
கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி தமரா குமாரி அபேரத்ன, போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி கடவத்தை பகுதியில் எட்டு வங்கிக் கணக்குகளைப் பராமரித்து வருவதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ்.போதரகம முன்னிலையில் இன்றைய தினம் (19.02.2026) நீதிமன்றில் சாட்சியங்களை முன்வைத்த போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரான சட்டத்தரணி போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து தயாரிக்கப்பட்ட கணக்குகள் மூலம் பெரிய அளவிலான நிதி பரிவர்த்தனைகளை மேற்கொண்டதாகத் தெரியவந்துள்ளது.
சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை கருத்தில் கொண்ட நீதவான், கேள்விக்குரிய எட்டு வங்கிக் கணக்குகள் குறித்து விரிவான விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு பிரிவிற்கு உத்தரவிட்டார்.
இந்தக் கொலை வழக்கு தொடர்பாக தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள மற்ற மூன்று சந்தேகநபர்களையும் அடுத்த மாதம் 5ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் மகேஷ் ஒபேசேகரவின் வசம் இருந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்யவும் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியது.
இந்த வழக்கை அடுத்த மாதம் 5ஆம் திகதி மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.