தனியார் பேருந்துடன் மோதிய முச்சக்கர வண்டி; ஒருவர் உயிரிழப்பு.!
குருநாகல், நாரம்மலை பகுதியில் தனியார் பேருந்தும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில், வாரியப்பொலை பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நாரம்மலை பிரதான வீதியில் பயணித்த தனியார் பேருந்தும், எதிரே வந்த முச்சக்கர வண்டியும் எதிர்பாராத விதமாக மோதியதில் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்தது.
விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டி சாரதியை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நாரம்மலை பொலிஸார், தனியார் பேருந்தின் சாரதியைக் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.