இலங்கை முஸ்லிம்களின் ரமழான் நோன்பு நாளை முதல் தொடக்கம் – கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு.!
இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாளை (வியாழக்கிழமை) முதல் புனித ரமழான் நோன்பினை ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஹிஜ்ரி 1447ஆம் ஆண்டிற்கான ரமழான் மாதத்தின் தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று புதன்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை, பள்ளிவாசல் நிர்வாகிகள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள், கொழும்பு மேமன் சங்க பிரதிநிதிகள், வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் உலமாக்கள் ஆகியோர் கலந்து, நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து வந்த தலைப்பிறை தகவல்களை ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதன்படி, இன்று இரவு முதல் பள்ளிவாசல்களில் விசேட ‘தராவிஹ்’ தொழுகைகள் ஆரம்பமாகும் என்றும், நாளை வியாழக்கிழமை புனித நோன்பு ஆரம்பமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் ஈகைப் பண்பையும்இறைவனை வணங்குவதையும் வளர்க்கும் இந்த மாதத்தை இலங்கை முஸ்லிம்களும் பக்தி உணர்வுடன் வரவேற்கத் தயாராகி உள்ளனர்.