சமன் ஏக்கநாயக்க பிணையில் விடுவிப்பு – கொழும்பு கோட்டை நீதிமன்றம் உத்தரவு.!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்க்ரமசிங்க அவர்களின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.நீதிமன்ற உத்தரவின் படி, தலா 2 மில்லியன் ரூபா மதிப்புடைய இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க வேண்டும் என நீதிவான் இசுரு நெத்திகுமார அறிவித்தார்.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்க்ரமசிங்க அவர்களுக்கு எதிரான பொது நிதி முறைகேடு குற்றச்சாட்டில் சமன் ஏக்கநாயக்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
2023 ஆம் ஆண்டு, ரணில் விக்க்ரமசிங்க தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரிட்டனுக்கு மேற்கொண்ட தனிப்பட்ட விஜயத்திற்கு 16.2 மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட பொது நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.விசாரணையின் போது சமன் ஏக்கநாயக்கவின் சார்பில் முன்னிலையிலான ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ பிணை கோரிக்கையை முன்வைத்தார். நீதிவான் அதை ஏற்றுக்கொண்டு நிபந்தனையுடன் பிணையை வழங்கினார்.