வன்னி மாவட்ட ஆசிரியர் இடமாற்றப் பிரச்சனை தொடர்பாக பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றார் சத்தியலிங்கம் எம்.பி…!
வன்னி மாவட்டங்களில் நீண்டகாலமாக நிலவி வரும் ஆசிரியர் இடமாற்றப் பிரச்சினைகள் தொடர்பில் ப. சத்தியலிங்கம் அவர்கள் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.இன்று (18.02.2026) பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற கல்வி அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்விடயத்தை முன்வைத்தார்.
அவர் தெரிவித்ததாவது, ஆசிரியர் இடமாற்றங்களின்போது தெளிவான மற்றும் சிறப்பான இடமாற்றக் கொள்கை இல்லாததே பல சிக்கல்களுக்கு காரணமாக உள்ளது. ஏனைய திணைக்களங்களில் வருடாந்த இடமாற்றங்களின்போது நீண்டகாலம் சேவையாற்றி இடமாற்றம் பெறத் தகுதியானோர் எண்ணிக்கையும், வெற்றிடங்களின் எண்ணிக்கையும் இணைத்து அறிவிக்கப்படுகின்றது.
ஆனால் கல்வித்துறையில் வெற்றிடங்களின் எண்ணிக்கை மட்டுமே அறிவிக்கப்படுவதால் நீண்டகாலமாக சேவையாற்றி இடமாற்றம் எதிர்பார்க்கும் ஆசிரியர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதன் விளைவாக மாணவர்களும் பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.ஆகையால் இடமாற்ற நடைமுறைகளில் தகுதியானோர் எண்ணிக்கையும், வெற்றிடங்களின் எண்ணிக்கையும் இணைத்து கணக்கிடும் முறை பின்பற்றப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த பிரதமர், இது சிறந்த யோசனை எனக் குறிப்பிட்டு, இயன்றவரை இவ்வாண்டிலேயே நடைமுறைப்படுத்த முயற்சிப்பதாகவும், இல்லையெனில் அடுத்த ஆண்டிலிருந்து அமல்படுத்தி ஆசிரியர் இடமாற்றங்களில் எதிர்கால சிக்கல்கள் தவிர்க்கப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.தொடர்ந்து வடக்கு மாகாணத்தில் கல்வித் திணைக்களத்தின் கீழ் பல்வேறு திட்டங்களின் மூலம் கட்டப்பட்டும் பூரணப்படுத்தப்படாமல் உள்ள கட்டிடங்கள் தொடர்பிலும் உறுப்பினர் கவனம் செலுத்தினார்.
கடந்த காலங்களில் மாகாணப் பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் அமைக்கப்பட்ட கட்டிடங்களில் பல இன்னும் நிறைவுபெறாமல் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.குறிப்பாக வவுனியாவில் அமைந்துள்ள சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் தொழிநுட்பக் கல்விக்காக அமைக்கப்பட்ட ஆய்வுகூடம் 90 சதவீதப் பணிகள் நிறைவடைந்த நிலையில் பயன்படுத்த முடியாமல் உள்ளதாகவும், மீதமுள்ள பணிகளை நிறைவு செய்தால் மாணவர்கள் பயன்பெற முடியும் எனவும் தெரிவித்தார்.இவ்விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து தேவையான வேலைத்திட்டங்களை விரைவாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் பதிலளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.