மட்டக்களப்பு மாவட்டத்தில் கனமழையால் மக்கள் அவதி; தாழ்வுப் பகுதிகள் வெள்ள அபாயத்தில்.!
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக இடைவிடாது பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் நிலவிய சுழற்சி தாழ்வுப் பகுதியாக மாறி அதே இடத்தில் நீடித்து வருவதால், மழை மேலும் தொடரக்கூடும் என வானிலை அவதான நிலையம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.
குறிப்பாக மட்டக்களப்பு நகரின் தாழ்வான பகுதிகள் வெள்ள அபாய நிலையில் காணப்படுவதுடன், சில முக்கிய வீதிகளிலும் நீர் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ச்சியான அடைமழையால் மாவட்டத்தில் நடைபெற்று வந்த அறுவடைச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்களை பாதுகாப்பதில் விவசாயிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, மாவட்டத்தின் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், முக்கிய நீர்த்தேக்கமான உன்னிச்சைகுளம் குளத்தின் மூன்று வான்கதவுகள் தலா இரண்டு அடிகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு நகரில் 128.9 மில்லிமீட்டர், மைலம்பாவெளியில் 104.5 மில்லிமீட்டர், உன்னிச்சைப் பகுதியில் 111 மில்லிமீட்டர், நவகிரியில் 52 மில்லிமீட்டர், உறுகாமத்தில் 63.9 மில்லிமீட்டர், தும்பங்கேணியில் 70 மில்லிமீட்டர், பாசிக்குடாவில் 80 மில்லிமீட்டர் மற்றும் வாகனேரியில் 39.8 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்யக்கூடிய சூழ்நிலை நிலவுவதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


