இராணுவத்தை அவமதித்துச் செயற்படும் இந்த அரசுக்கு எதிர்ப்புக் காட்ட வேண்டும்.!
“இலங்கையின் 78ஆவது சுதந்திர தினம் தேசியத்துக்காகக் கொண்டாடப்பட்டதா?அல்லது புலம்பெயர் விடுதலைப்புலிகள் அமைப்புகளுக்காகக் கொண்டாடப்பட்டதா? சுதந்திர தின நிகழ்வில் போரை வெற்றி கொண்ட இராணுவத்தினர் பெருமைப்படுத்தப்படவில்லை. இந்த அரசு இராணுவத்துக்கு எதிராகவே செயற்படுகின்றது. இதற்குப் பெரும்பான்மையின மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-
“இலங்கையை ஆக்கிரமிப்பதற்கு வரலாற்றுக் காலங்களில் மேற்கொண்ட ஆக்கிரமிப்புக்களைச் சிங்கள மன்னர்களும், தலைவர்களும் தோற்கடித்து நாட்டைப் பாதுகாத்தார்கள். 1948 ஆம் ஆண்டு காலனித்துவ ஆட்சியில் இருந்து நாடு முழுமையாகச் சுதந்திரமடைந்தது.
நாட்டின் ஒற்றையாட்சிக்கு எதிராகவே விடுதலைப்புலிகள் அமைப்பினர் ஆயுதமேந்திப் போராடினார்கள். 30 ஆண்டு கால போராட்டத்தின் பின்னர் 29 ஆயிரம் இராணுவத்தினர் தமது உயிரைத் தியாகம் செய்து நாட்டைப் பாதுகாத்தனர். 2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டு நாடு இரண்டாவது தடவையாகச் சுதந்திரமடைந்தது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இராணுவத்தினருக்கும், தேசியத்துக்கும் முன்னுரிமை வழங்கி நாட்டை ஆட்சி செய்தார். ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்காகவே செயற்படுகின்றார்.
78 ஆவது சுதந்திர தினம் தேசியத்துக்காகக் கொண்டாடப்பட்டதா? அல்லது புலம்பெயர் விடுதலைப்புலிகள் அமைப்புகளுக்காகக் கொண்டாடப்பட்டதா? என்ற சந்தேகம் காணப்படுகின்றது.
2009 ஆம் ஆண்டு போரை முடிவுக்குக் கொண்டு வந்த போது பயன்படுத்தப்பட்ட பீரங்கிகள் மற்றும் போர் வாகனங்கள் சுதந்திர தினத்தில் காட்சிப்படுத்தப்படவில்லை.
அதேபோல் போரை முடிவுக்குக் கொண்டு வந்த இராணுவத்தினர் பெருமைப்படுத்தப்படவில்லை. இந்த அரசு இராணுவத்துக்கு எதிராகவே செயற்படுகின்றது. இதற்குப் பெரும்பான்மையின மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.” – என்றார்.