சொற்களை விட செயலே முக்கியம்; நம்பிக்கையை துரிதமாக கட்டியெழுப்பும் அநுர அரசு.!
“சுதந்திர தினம் என்பது வடக்கை பொறுத்தவரை கடந்த காலங்களில் ஒரு கரிநாளாகப் பார்க்கப்பட்ட போதிலும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசு ‘சொற்களை விட செயலே முக்கியம்’ என்ற அடிப்படையில் நம்பிக்கையைத் துரிதமாகக் கட்டியெழுப்பி வருகின்றது.” – இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார்.
இலங்கையின் 78ஆவது சுதந்திர தின நிகழ்வு நேற்று வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபைக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. இதில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“வடக்கு மாகாணத்தில் பல தசாப்தங்களாக விடுவிக்கப்படாமல் இருந்த காணிகள் எவ்வித அரசியல் நிபந்தனையும் இன்றி உரிமையாளர்களிடம் விடுவிக்கப்படுவது நல்லாட்சிக்கான சிறந்த சான்றாகும்.
அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ சூறாவளிப் பேரனர்த்தத்தின் போது வடக்கு மாகாண சபைக்குப் போதிய நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவித்திருந்ததாலும், நாம் தனித்து விடப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் எமது மாகாணத்துக்கு வந்த பல நல்ல அபிவிருத்தித் திட்டங்களை, அவை மத்திய அரசிடமிருந்து வருகின்றன என்பதற்காகவோ அல்லது அரசியல் காரணங்களுக்காகவோ நாம் எதிர்த்திருக்கின்றோம் அல்லது சந்தேகக் கண் கொண்டு பார்த்திருக்கின்றோம். ‘எதிர்ப்பதுதான் அரசியல்’ என்ற ஒரு பழமைவாத அரசியல் கலாச்சாரம் இங்கு வேரூன்றியிருப்பதை நாம் மறுக்க முடியாது.
ஆனால், இந்த மனப்பாங்கு எமது இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதிப்பதை நாம் சிந்திக்க வேண்டும். அபிவிருத்தித் திட்டங்கள் வரும்போது, அவற்றை அரசியல் கண்ணாடி கொண்டு பார்க்காமல், இதனால் எமது மக்களுக்கு என்ன நன்மை?, எமது இளைஞர்களுக்கு எவ்வளவு வேலைவாய்ப்பு கிடைக்கும்? என்ற வளர்ச்சிக்கான கண்ணோட்டத்தில் பார்க்கப் பழகிக்கொள்ள வேண்டும்.
உலகம் வேகமாக இயங்கிக்கொண்டிருக்கின்றது. நாம் இன்னும் பழைய கோஷங்களை வைத்துக்கொண்டு வரும் வாய்ப்புகளைத் தட்டிக்கழித்தால், எமது அடுத்த சந்ததி தொழில் தேடி வெளிநாடுகளுக்கும் வெளி மாவட்டங்களுக்கும் செல்லும் நிலை மாறாது.
எனவே, மக்களின் நன்மை கருதி வரும் திட்டங்களை அரவணைத்து, அவற்றை வெற்றிபெறச் செய்வதே விவேகமான அரசியலாகும். ஆக்கபூர்வமான விமர்சனங்கள் தேவை; ஆனால் கண்மூடித்தனமான எதிர்ப்புகள் எமது வளர்ச்சியை நாமே தடுப்பதற்குச் சமமாகும்.” – என்றார்.