யாழ். அரியாலை கிழக்கில் ஈரநில பிரதேசத்தில் உலக ஈர நில தினம் அனுஷ்டிப்பு!
ஈர நிலங்களின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் சூழலியல் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கில் சர்வதேச உலக ஈர நில தினம் இன்றைய தினம் (02.02.2026) கடைப்பிடிக்கப்படுகிறது.
இதன் அடிப்படையில், யாழ்ப்பாண மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அரியாலை கிழக்கு ஈரநில பிரதேசத்தில் இன்று காலை 9.00 மணிக்கு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் திரு. லோ.கி ஆனந் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் கலந்து சிறப்பித்தார். மாவட்ட அரசாங்க அதிபர் உரையில், உலக ஈரநில தினத்தின் தேசிய விழா இன்று பத்தரமுல்லை ‘அபே கம’ வளாகத்தில் பிரதமர் கெளரவ ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெறுகின்றது என்றும், இதற்கு இணையாக யாழ்ப்பாண மாவட்ட நிகழ்வு இங்கு நடைபெறுகின்றது என்றும் தெரிவித்தார்.
அவர், ஈர நிலங்கள் நீர் வளங்களை பாதுகாப்பதிலும், வெள்ள கட்டுப்பாட்டிலும், உயிரியல் பல்துறை பாதுகாப்பிலும் முக்கிய பங்காற்றுகின்றன என்பதையும், இவற்றை பாதுகாத்து இயற்கைச் சமநிலையை பேணுவதை அவசியமாகக் கூறினார். மேலும், “ஈரநிலங்கள் மற்றும் பாரம்பரிய அறிவு – கலாசார பாரம்பரியத்தை கௌரவித்தல்” என்ற தொனிப்பொருளில் இந்நாள் உலகளாவிய ரீதியாக கொண்டாடப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்வு விழிப்புணர்வு நடைபவனியுடன் தொடங்கியது; நிகழ்வு பகுதியில் கண்டல் தாவர மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டு, ஈர நில தினம் தொடர்பான வழிகாட்டல் கையேடுகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர், யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சுற்றாடல் பிரிவு பொலிஸார், யாழ் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தியோகத்தர்கள், தெல்லிப்பளை யூனியன் கல்லூரி சுற்றாடல் முன்னோடி மாணவர்கள், பாடசாலை சுற்றாடல் கழக முன்னோடி மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.
