கிவுல் ஓயா திட்டம் திட்டமிட்ட இன அழிப்பின் தொடர்ச்சி – லியோ ஆம்ஸ்ரோங் அடிகளார்.!
சர்ச்சைக்குரிய கிவுல் ஓயா திட்டமானது, தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நன்கு கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் தொடர்ச்சியாகவே காணப்படுகின்றது என தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத் தலைவர் லியோ ஆம்ஸ்ரோங் அடிகளார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மகாவலி அதிகார சபையால் வெளியிடப்பட்டுள்ள திட்ட அறிக்கையின் படி, கிவுல் ஓயா நீர்த்தேக்கம் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீக கிராமங்களுக்கு அண்மையில் அமைக்கப்படவுள்ள ஒரு மிகப்பெரிய நீர்த்தேக்கமாகும்.
அந்தத் திட்ட அறிக்கையில், குறித்த நீர்த்தேக்கத்தின் பயனாளிகளாக மூவாயிரத்து இருநூற்று மூன்று சிங்களக் குடும்பங்கள் குறிப்பிடப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கதாகும்.இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், வெடிவைத்த கல்லு, ஈச்சங்குளம், கூழாங்குளம், காஞ்சூரமோட்டை உள்ளிட்ட பாரம்பரிய தமிழ் கிராமங்களின் 400 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய மற்றும் குடியிருப்பு நிலங்கள் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுகின்றது.
மேலும், 47 தொல்லியல் பிரதேசங்களும் கிவுல் ஓயா நீர்த்தேக்கத்தின் கீழ் மூழ்கிப்போகும் நிலை இருப்பதாக, மகாவலி அதிகார சபையின் திட்ட அறிக்கையின் ஊடாக தெரியவருகின்றது.
இந்த உண்மைத் தகவல்கள் அனைத்தையும் மூடிமறைத்துக் கொண்டு, தமிழ் அரசியல்வாதிகளின் கருத்துக்கள் பொய்யானவை என கடற்றொழில் அமைச்சர் இ. சந்திரசேகர் கூறியமைக்கு, தமிழர் மரபுரிமைப் பேரவை கடும் கண்டனத்தை வெளியிடுகிறது.
வடக்கில் மக்களை அரவணைப்பது போன்று நடித்து, பின்னால் இருந்து தாக்கும் அரசியல் நடவடிக்கைகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றன எனவும், அவை மிகுந்த கவலைக்குரியவை எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கைத் தீவில் நிலையான அபிவிருத்தி, சமாதானம், சமத்துவம் மற்றும் நல்லிணக்கம் நிலைபெற வேண்டுமாயின், இவ்வாறான திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்திற்கு எதிராக தமிழ் மக்கள் எந்தவிதமான விட்டுக்கொடுப்பும் இன்றி தொடர்ந்து போராடுவார்கள் எனவும், அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.