வடக்கு மக்களின் அபிவிருத்தியும் , அடிப்படைத் தேவைகளும் நிறை வேற்றப்படும் – அநுர அரசு அறிவிப்பு.!
வடக்கு மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். அதேவேளை, அபிவிருத்திப் பணிகளும் எந்தத் தடையுமின்றி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அரசு உறுதியளித்துள்ளது.இது தொடர்பில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது,
ஒரு அரசாக, நாட்டின் அபிவிருத்தியை எந்தவிதமான தடைகளும் இன்றி முன்னெடுத்து வருகின்றோம். அந்த வகையில், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பொதுமக்கள் காத்திருப்பு பகுதியின் பணிகள் தற்போது நிறைவு பெறும் நிலையில் உள்ளன. இதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட செயற்பாடுகள் தொடர்பிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
கடந்த அரசின் காலப்பகுதியில் குறித்த விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், அது முழுமையான சர்வதேச விமான நிலையமாக செயல்படாத நிலை காணப்பட்டது. தற்போதைய அரசு, அதனை முழுவீச்சில் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் முக்கிய பங்களிப்பை வழங்கும் என்பதில் அரசுக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது.
விமான சேவைகளை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பில் விமான சேவை நிறுவனங்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. எதிர்காலத்தில் சேவைகள் விரிவுபடுத்தப்படவுள்ளன.அதேபோல், காங்கேசன் துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகளை விரிவுபடுத்துவது தொடர்பிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மயிலிட்டி துறைமுக அபிவிருத்திக்காக சுமார் 400 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் மயிலிட்டி துறைமுகம் விடுவிக்கப்பட்டிருந்த போதிலும், அதன் அபிவிருத்திப் பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டிருந்தன. இந்நிலையில், நாட்டின் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களால் வரவு–செலவுத் திட்டத்தின் ஊடாக தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், யாழ்ப்பாணம் கொழும்புத்துறை இறங்குதுறை மற்றும் குறிகாட்டுவான் இறங்குதுறை ஆகியவற்றின் அபிவிருத்திப் பணிகள் இவ்வருட இறுதிக்குள் நிறைவு பெறும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.சகல இன, மத மக்களையும் இணைத்துக் கொண்டு நாட்டில் புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் அரசாகவே தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்துள்ளது என்பது யாவரும் அறிந்த விடயமாகும்.
எமது அரசின் பயணத்தை தடுத்து நிறுத்தலாம் என சிலர் நினைக்கின்றனர். கடந்த காலங்களைப் போல மீண்டும் ஒரு திருடர் யுகத்தை உருவாக்கவே அவர்கள் முயற்சிக்கின்றனர். நாட்டை மீண்டும் அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் நோக்கில் சிலர் இனவாதத்தை கையில் எடுத்து வருகின்றனர். அது அவர்களின் அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கும், இழந்த அரசியலை மீண்டும் உயிர்ப்பிக்கவும் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளாகும்.
ஆகவே, வடக்கு மக்களுக்குத் தெளிவாக கூற விரும்புகின்றேன். எமது அரசு மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அரசாக செயற்படும் அதேவேளை, அபிவிருத்திப் பணிகளையும் தொடர்ச்சியாக முன்னெடுக்கும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்