மன்னார் பாத்திமா புரத்தில் வீதி அமைப்பு பணியின் போது மோதல் – நகரசபைத் தலைவர் மீது தாக்குதல் குற்றச்சாட்டு.!
மன்னார் பாத்திமா புரம் பகுதியில் நகரசபைக்கு சொந்தமான வீதி ஒன்றை அமைக்கும் பணியின் போது, எமில் நகர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கும் மன்னார் நகரசபைத் தலைவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், அது கைகலப்பாக மாறி அடிதடியில் முடிந்துள்ளது.
இந்த சம்பவத்தில் எமில் நகர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் காயமடைந்து மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,மன்னார் நகரசபைக்கு சொந்தமான எமில் நகர் எல்லையிலுள்ள பாத்திமா புரம் பகுதியில் நகரசபை நிர்வாகத்தின் கீழ் உள்ள வீதிகளில் கிரவல் பரப்பும் பணிகள் இடம்பெற்று வந்துள்ளன. இந்நிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தங்களது பகுதி வீதியையும் அமைத்து தருமாறு நகரசபையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்த நபர், தங்களது வீதியை அமைத்து தருமாறு, மன்னார் நகரசபைத் தலைவரிடம் முன்னதாகவே பலமுறை தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இன்று (30) வீதி அமைப்பு பணிகளை நேரில் கண்காணித்து வந்த மன்னார் நகரசபைத் தலைவரிடம், குறித்த நபர் நேரடியாக அணுகி, நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தும் தங்களது பகுதி வீதியை அமைக்காமல், தனிப்பட்ட நபர் ஒருவருக்காக இந்த வீதியை அமைப்பது நியாயமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு நகரசபைத் தலைவர் குறித்த நபரிடம் தெரிவித்ததாகவும், அதற்கு அவர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, நகரசபைத் தலைவர் தன்னை தள்ளிவிட்டு தாக்குதல் நடத்தியதாக, காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.பின்னர், இருவரும் மாறிமாறி தாக்கிக் கொண்டதுடன், ஒருவரை ஒருவர் கற்களால் எறிந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோதலில் அதிக அளவு தாக்குதலுக்கு உள்ளான எமில் நகர் பகுதியைச் சேர்ந்த நபர் காயங்களுடன் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும், குறித்த மோதலின் போது கற்கள் எறியப்பட்ட நிலையில், அங்கு இருந்த மன்னார் நகரசபையின் பெண் உறுப்பினர் ஒருவரும் தாக்குதலுக்கு உள்ளாகியதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் அந்த பெண் உறுப்பினர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.