சக்தி திட்டம் தமிழ் தேசிய அரசியலை வேரிலேயே அழிக்கும் அபாயம் – சி.அ. யோதிலிங்கம் தெரிவிப்பு.!
தேசிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்படும் பிரஜா சக்தி எனும் திட்டம், தமிழ் தேசிய அரசியலை வேரோடு அழிக்கக்கூடிய அபாயகரமான ஒன்றாகும் என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குநருமான சி.அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இன்று அவர் தனது அலுவலகத்தில் நடத்திய ஊடகச் சந்திப்பில் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியாளர்கள், அடிமட்ட மக்களுடன் பணியாற்றுவதற்காக பிரஜா சக்தி எனும் அமைப்பை உருவாக்கியுள்ளனர். அந்த அமைப்பின் ஊடாக வறுமை ஒழிப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக அவர்கள் கூறிவருகின்றனர்.
தங்களிடம் உள்ளூராட்சி அதிகாரம் இல்லாத பகுதிகளில், அந்த உள்ளூராட்சி அமைப்புகளை பலவீனப்படுத்தும் நோக்கில், அவற்றுக்கு சமாந்தரமாக உருவாக்கப்பட்ட அமைப்பே இந்த பிரஜா சக்தி ஆகும். குறிப்பாக தமிழ் பகுதிகளில் உள்ளூராட்சி மன்றங்களை செயலிழக்கச் செய்வதற்காகவே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறலாம்.கிராமங்களில் பிரஜா சக்திக்கான தலைவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். ஆனால் அந்தத் தெரிவுகள் மக்களால் மேற்கொள்ளப்படுவதில்லை. தேசிய மக்கள் சக்தியினரிடம் நம்பிக்கையுடன் நிற்பவர்களையே அவர்கள் தலைவர்களாக நியமிக்கின்றனர்.
ஜனாதிபதி வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு வருகை தரும் போது, கிளைகளின் ஊடாக மக்களை அழைத்து வருமாறு கட்டளை இடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிராம சேவையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரஜா சக்தி கட்டமைப்புகள் மூலமாக மக்களை ஒன்று சேர்க்க உத்தரவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு மற்றும் கிழக்கு தமிழர் பகுதிகளில் தங்களது செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்காகவே இந்த அமைப்பு செயற்படுகிறது எனக் கூறலாம். அடிமட்ட மக்களுடன் பணியாற்றிய அனுபவம் தேசிய மக்கள் சக்தியின் தலைமைக் கட்சியிடம் இருப்பதால், அது அவர்களுக்கு இங்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
இந்த நிலைமையின் அபாயத்தை தமிழ் தேசிய அரசியல் சக்திகள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் தேசிய அரசியல் சக்திகள் தொடர்ச்சியாக எதிர்ப்பு அரசியலில் மட்டுமே ஈடுபட்டு வருவதுடன், தேச நிர்மாண அரசியலில் போதிய கவனம் செலுத்தவில்லை.எமது சமூகத்தில் உதவிகளையும் தேவைகளையும் எதிர்பார்த்து நிற்கும் அடிமட்ட மக்கள் இருக்கின்றனர். அந்த மக்களின் நலன்களை பாதுகாப்பது தமிழ் தேசிய அரசியல் சக்திகளின் கடமையாகும். ஆனால் அந்தப் பொறுப்பை அவர்கள் சரியாக நிறைவேற்றாத காரணத்தால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அந்த வெற்றிடத்தை நிரப்பும் நிலை உருவாகியுள்ளது.
இது மிகவும் அபாயகரமான ஒன்றாகும். ஏனெனில், அடிமட்டத்தில் தமிழ் தேசிய அரசியலை மெதுவாக பலவீனப்படுத்தும் செயற்பாடாக இது மாறுகிறது. உண்மையில், கிராமங்களில் வாழும் அடிமட்ட மக்களை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்தும் ஒரு செயற்பாட்டையே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்க முயற்சிக்கிறது.இதன் விளைவாக தமிழ் தேசிய அரசியல் வேரிலேயே அழுகச் செய்யப்படும் அபாய நிலை உருவாகியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் வலுவான கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக நான் கருதுகின்றேன். எதிர்ப்பு அரசியலில் மட்டும் அல்லாது, தேச நிர்மாண அரசியலிலும் கவனம் செலுத்தும் போது மட்டுமே இந்த சவால்களை வெற்றிகொள்ள முடியும்.
இந்த விடயத்திற்கான பொறுப்பு தமிழ் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல. தமிழ் தேசிய சக்திகள் அனைவருக்கும் இந்தப் பொறுப்பு இருக்கிறது என நான் நம்புகின்றேன் என அவர் தெரிவித்தார்.