துணுக்காய்- தென்னியன்குளத்தில் பிரமாண்ட பொங்கல் விழா!
விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டம், துணுக்காய் பிரதேச செயலகம் மற்றும் இளம்புயல் விழையாட்டுக் கழகம் ஆகியவை இணைந்து நடத்திய பொங்கல் விழா, 29.01.2026 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தென்னியன்குளம் பொது விழையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்தின் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளரும் ஊடகவியலாளருமான ச. தவசீலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், துணுக்காய் பிரதேச செயலாளர் இராமதாஸ் ரமேஸ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.பொங்கல் நிகழ்வுடன் ஆரம்பமான இவ்விழாவில் சிறுவர்கள், இளையவர்கள் மற்றும் முதியவர்களுக்கென பல்வேறு பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
அதன்படி கிறிஸ் மரம் ஏறுதல், கிளித்தட்டு, கயிறிழுத்தல், தலையணைச் சண்டை, பலூன் ஊதி உடைத்தல், முட்டி உடைத்தல், தேங்காய் திருவுதல், கிடுகு பின்னுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், வெற்றிபெற்றவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும், தென்னியன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் தெரிவுசெய்யப்பட்ட 42 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் இந்நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் தென்னியன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் செ. நவரத்தினராசா, தென்னியன்குளம் கிராம அலுவலர் செல்வி ந. கஜனி, கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர், கமக்கார அமைப்புத் தலைவர், நன்னீர் மீன்பிடிச் சங்கத் தலைவர், விழையாட்டுக் கழகத் தலைவர், துணுக்காய் பிரதேச செயலக அதிகாரிகள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


