வவுனியா ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்தை தரம் 1C பாடசாலையாக உயர்த்த சத்தியலிங்கம் எம்.பி கோரிக்கை.!
வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்தினை தரம் 1C பாடசாலையாக தரமுயர்த்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான மருத்துவர் ப. சத்தியலிங்கம், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இக்கடிதத்தின் பிரதிகள் வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்தக் கடிதத்தில், வவுனியா மாவட்டத்தின் வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராஜா வித்தியாலயம் தற்போது தரம் 2 பாடசாலையாக இயங்கி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
1995 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இப்பாடசாலை சுமார் 4 ஏக்கர் விஸ்தீரணமுடையதாகவும், தற்போது 615 மாணவர்கள் கல்வி கற்று வருவதோடு, 32 ஆசிரியர்கள் உள்ளிட்ட 35 பேர் பணியாற்றி வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக இப்பாடசாலையில் தரம் 12 மற்றும் 13 வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த போதிலும், கல்வித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அனுமதி கிடைக்காத காரணத்தினால், அங்கு கல்வி கற்ற மாணவர்கள் அருகிலுள்ள கோமரசங்குளம் மகா வித்தியாலயத்தில் பரீட்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தூரம் மற்றும் பாடசாலையின் அமைவிடத்தை கருத்தில் கொண்டு, இப்பாடசாலையிலேயே தரம் 12 மற்றும் 13 வகுப்புகளை ஆரம்பிக்க வேண்டிய தேவை தற்போது காலத்தின் கட்டாயமாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இப்பாடசாலையை தரமுயர்த்துவது தொடர்பான கோரிக்கைகள், வவுனியா பிரதேச அபிவிருத்திக் குழு மற்றும் வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டங்களிலும் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கல்வி கற்று வரும் இப்பாடசாலையினை, குறித்த பகுதி மக்களின் நலன் மற்றும் மாணவர்களின் சிறந்த கல்வி முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, தரம் 1C பாடசாலையாக தரமுயர்த்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடம் மருத்துவர் ப. சத்தியலிங்கம் தனது கடிதத்தின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.