புதிய மிருக வைத்தியசாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!
நான்கு கோடி ரூபாய் செலவில் மஸ்கெலியா நகரில் புதிய மிருக வைத்தியசாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணிக்கு மஸ்கெலியா நகரில் ஆலய வீதியில் முன்னைய மிருக வைத்தியசாலைக்கு அருகில் சகல வளங்களும் கொண்ட மிருக வைத்திய சாலைக்கு மஸ்கெலியா மிருக வைத்திய சாலையின் மிருக வைத்திய அதிகாரி தலைமையில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது.
இவ் வைபவத்தில் மத்திய மாகாண மிருக வைத்திய அத்தியட்சகர், மத்திய மாகாண மிருக வைத்திய உதவி அத்தியட்சகர், நாவலப்பிட்டி பகுதிக்கு பொறுப்பான மிருக வைத்திய அதிகாரி, ஹட்டன் பகுதிக்கு பொறுப்பான மிருக வைத்திய அதிகாரி, பொகவந்தலாவ பகுதிக்கு பொறுப்பான மிருக வைத்திய அதிகாரி, நுவரெலியா மாவட்ட மிருக வைத்திய அத்தியட்சகர் அடங்கலாக மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் மற்றும் மஸ்கெலியா பிரதேச சபையின் உறுப்பினர்கள், செயலாளர் மஸ்கெலியா மிருக வைத்தியசாலையில் உள்ள ஏனைய அதிகாரிகள், மஸ்கெலியா பகுதியில் உள்ள பண்ணையாளர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் மஸ்கெலியா சுமாரான விகாரையில் உள்ள பௌத்த மதகுரு அவர்களின் சமய கிரியைகளை தொடர்ந்து சுப வேளையில் அடிக்கல் நாட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றிய மத்திய மாகாண மிருக வைத்திய அத்தியட்சகர் 1968 ஆம் ஆண்டு காலப் பகுதியில் கட்டப்பட்ட வைத்தியசாலை முழுமை பெறாத நிலையில் இருந்தது. அதன் காரணமாக இவ் வைத்தியசாலையில் அடிக்கடி வைத்தியர்கள் மாற்றம் பெற்று சென்றனர் காரணம் தங்குமிடம் இல்லை.
இன்றைய அரசு நான்கு கோடி ரூபாய் செலவில் மிருக வைத்தியசாலைக்கு உரித்தான இடத்தில் நவீன முறையில் மிருக வைத்தியசாலை வைத்தியர்கள் தங்குமிடம் மற்றும் ஏனைய முழுமைப்படுத்தப்பட்ட மிருக வைத்தியசாலை ஒன்றை அமைக்க முன்வந்துள்ளது.
இந்த கட்டிடம் இன்னும் ஒரு வருடத்தில் கட்டப்பட்டு இப் பகுதியில் உள்ள அனைத்து பண்ணையாளர்களும் பயன் பெற மக்கள் பாவனைக்கு விடப்படவுள்ளது என்றார்.
இந்த நிகழ்வில் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் மற்றும் உறுப்பினர்கள் உரையாற்றினார்கள்.





