பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வாகனம்; சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி.!
திம்புள்ள பத்தனை ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில், திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்கிளயார் தோட்டத்திற்கு அருகில் இன்று (29) முற்பகல் 9.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென் கிளயார் பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த வேன் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலுள்ள பள்ளத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான வேன் கண்டி பகுதியில் இருந்து புதிதாக கொள்வனவு செய்து கொண்டு வரப்பட்ட வாகனம் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவ நேரத்தில் வாகனத்தை தந்தை செலுத்தியிருந்ததுடன், அவருடன் அவரது மூன்று பிள்ளைகளும் பயணித்துள்ளனர்.
விபத்தில் வாகனத்தில் பயணித்திருந்த ஒரு சிறுவன் காயமடைந்த நிலையில், பிரதேச மக்களின் உதவியுடன் உடனடியாக கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏனையவர்களுக்கு குறிப்பிடத்தக்க காயங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


