வடமராட்சி கிழக்கு போக்குவரத்து பிரச்சினைகள் தொடர்பாக இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள் கள விஜயம்..!
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பகுதியில் அண்மைக்காலமாக ஏற்பட்டுவரும் பல்வேறு போக்குவரத்து பிரச்சினைகள் தொடர்பாக, மக்கள் மற்றும் பொது அமைப்புகளினால் உரிய திணைக்களங்களுக்கு பல முறை முறைப்பாடுகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. எனினும், அவற்றிற்கு இதுவரை உரிய தீர்வு கிடைக்காத நிலையில், இம்மாத ஆரம்பத்தில் நடைபெற்ற வடமராட்சி கிழக்கு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் குறித்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் உரிய நேரத்திற்கு வருகை தருவதில்லை, மருதங்கேணி வைத்தியசாலை அருகில் நீண்ட நேரம் காத்திருந்து பயணிகளை ஏற்றிச் செல்கின்றன, கேவில் வரை பேருந்து சேவை இடம்பெறுவதில்லை, இலகுவாக பழுதடையும் பேருந்துகள் பணியமர்த்தப்படுகின்றன என்பன போன்ற முறைப்பாடுகள் ஊடகங்களில் வெளியாகின.
இந்நிலையில், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வடமராட்சி கிழக்கு அபிவிருத்திக் குழு தலைவருமான ரஜீபன் அவர்களிடம் கோரிக்கை விடுத்ததை அடுத்து, அவரது உடனடி உத்தரவின் பேரில் இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள் இன்று வடமராட்சி கிழக்கு பகுதிகளில் கள விஜயம் மேற்கொண்டனர்.
கள ஆய்வின் போது, வடமராட்சி கிழக்கு பகுதிக்கு போதியளவு பேருந்துகள் இல்லாத காரணத்தினால் மக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக மருதங்கேணி வைத்தியசாலை அருகில் பேருந்துகள் காத்திருந்து பயணிகளை ஏற்றிச் செல்வதாகவும், இதனைத் தவறாக புரிந்து கொண்டு வெளியிடப்படும் சில ஊடகச் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், கேவில் வரை பேருந்து சேவை இடம்பெறாததற்கான காரணமாக, பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இரவு நேரங்களில் தங்குவதற்கும் பேருந்துகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கும் ஏற்பட்ட சிக்கல்கள் சுட்டிக்காட்டப்பட்டன. இந்நிலையில், கேவில் கிராம அபிவிருத்தி சங்கத்தின் உதவியுடன் தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இனி பேருந்து சேவையில் தடையில்லை எனவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இனி வடமராட்சி கிழக்கு மக்கள் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவையால் சிரமப்பட வேண்டியதில்லை என்றும், ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக அறிவித்தால் அதற்கான தீர்வுகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்தக் கள விஜயத்தில், வடமாகாண சிகரம் கல்வி நிறுவனத்தின் அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீபன் அவர்களின் வடமராட்சி கிழக்கு இணைப்பாளருமான உதய பாஸ்கரன் அவர்களும் கலந்து கொண்டனர்.

