அநுரவின் ஆட்சி தோல்வியில்; இது எதிரணிகள் எழும் நேரம்.!
“அநுரவின் ஆட்சியின் கீழ் மக்களின் எதிர்பார்ப்பு தவிடுபொடியாகி வருகின்றது. எனவே, எதிரணிகள் வலுவாகச் செயற்பட வேண்டும்.” – இவ்வாறு முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது ரமேஷ் பத்திரன மொட்டுக் கட்சி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கவில்லை.
சிலிண்டர் கூட்டணியில் களமிறங்கிய ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகவே அவர் செயற்பட்டார்.
இந்நிலையிலேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் மீண்டும் இணைந்துள்ளார்.
அவருக்கு காலி, எல்பிட்டிய தொகுதி அமைப்பாளர் பதவியை கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ வழங்கி வைத்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ரமேஷ் பத்திரன,
“நான் மீண்டும் அரசியல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளேன். தாய்வீட்டுக்கு மீண்டும் வந்துவிட்டேன். இனி வலுவான முறையில் அரசியல் பயணம் தொடரும்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு அதிக வாங்கு வங்கி உள்ள மாவட்டம்தான் காலி மாவட்டம். அங்கு சிறப்பான முறையில் பயணம் தொடரும்.
இந்த ஆட்சியின் கீழ் மக்களின் எதிர்பார்ப்பு தவிடுபொடியாகி வருகின்றது. எனவே, எதிரணிகள் வலுவாகச் செயற்பட வேண்டும்.” – என்றார்.