நோயாளிகள் உயிருடன் விளையாட வேண்டாம் கடமைக்குத் திரும்புங்கள்.!
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்றும் இரண்டாவது நாளாக தொடர்ந்த நிலையில் நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் நோயாளிகள் பெரும் அசௌகரியங்களை எதிர் கொள்ள நேர்ந்தது.
வைத்தியசாலைகளில் வெளி நோயாளர் பிரிவுகள் இன்றும் வெறிச்சோடிக் கிடந்ததுடன் சில இடங்களில் நோயாளிகள் வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக வந்து ஏமாற்றத்துடன் திரும்பியதை காண முடிந்தது.அதேவேளை தமது பிரச்சினைகள் தொடர்பில் இதுவரை சாதகமான பதில்கள் கிடைக்கவில்லை என மேற்படி சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளதுடன் பணிப்பகிஷ்கரிப்பை மேலும் நீடிப்பதா என்பது தொடர்பில் நாளை திங்கட்கிழமை சங்கம் கூடி தீர்மானிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில், தாம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருந்துகளை பெற்றுக்கொள்ள கையில் காசு இல்லாத நிலையில் உதவியற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும்” தெரிவித்தனர்.
சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த பணி பகிஷ்கரிப்பு போராட்டம் தொடர்பில் தெரிவிக்கையில்;
”தற்போதைய அரசாங்கம் அரசாங்கம் வைத்தியர்களுக்கு பெருமளவு சம்பள அதிகரிப்பை வழங்கியுள்ளது. குறைபாடுகள் அனைத்தையும் நிவர்த்தி செய்து வருகிறது.இத்தகைய நிலையில் நோயாளர்களை பலிக்கடாக்களாக்கி வைத்தியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளக்கூடாது என்றும் நோயாளர்களின் நலனைக் கருத்திற் கொண்டு உடனடியாக கடமைக்கு திரும்பு மாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அனைத்துப் பிரச்சினைகளையும் செவிமடுத்து அவற்றை பேச்சுவார்த்தையின் மூலம் நிவர்த்தி செய்து கொள்ள முடியும்” என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.அதேவேளை, மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 28ஆம் திகதி மீண்டும் ஒரு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சாணக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.