விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் சஜித்துடன் முக்கிய பேச்சு.!
தனது இராஜதந்திர பதவிக் காலச் சேவை நிறைவடைந்து நாட்டிலிருந்து விடைபெற்றுச் செல்லும் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐக்கிய அமெரிக்காவின் தூதுவர் ஜூலி சாங், இன்று காலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
அவரது பதவிக் காலத்தில், இரு நாடுகளின் உறவுகளைப் பல்வேறு துறைகள் ஊடாக வலுப்படுத்துவதற்கும், முன்னேற்றம் காணச் செய்வதற்கும், வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் எடுத்த முயற்சிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.
மிக அண்மைக் காலங்களில் இலங்கை எதிர்கொண்ட அசாதாரண துயர் சம்பவங்களின் போது இலங்கைக்கு மனிதாபிமான ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அமெரிக்கா ஊடாகப் பெற்றுத் தந்த ஒத்துழைப்புகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தமது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார்.



