உந்துருளி திருடர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!
கேகாலையில் உந்துருளி திருட்டு மற்றும் தங்கச் சங்கிலி பறித்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வரக்காபொல நீதவான் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை (15) உத்தரவிட்டுள்ளது.
வரக்காபொல பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது மூன்று சந்தேக நபர்கள் புதன்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கிரிஉல்ல மற்றும் தம்பதெனிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் மூவரும் போதைப்பொருள் பாவனைக்குக் அடிமையானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, சந்தேக நபர்களால் போலி இலக்கத் தகடுகள் பயன்படுத்தப்பட்ட இரண்டு உந்துருளிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், திருடப்பட்ட மற்றுமொரு உந்துருளியும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சந்தேக நபர்கள் வரக்காபொல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவர்களை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.