பத்து நிமிடம் மழை பெய்தால் போதும் வெள்ள நீர் தேங்கும் சாய்ந்தமருது பெண்கள் சந்தை.!
10 நிமிடம் மழை பெய்தால் போதும் வெள்ள நீர் தேங்கும் பிரதேசமாக அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சாய்ந்தமருது பெண்கள் சந்தை (பொம்பிளை சந்தை – உள்ளூரில் அழைக்கப்படும் பெயர்) ஆகும்.
இன்று மட்டுமல்ல பருவ காலத்தில் கூட அடிக்கடி வெள்ள நீரினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்ற சந்தைப் பகுதியாகவும் இச் சந்தையை சூழ உள்ள மாநகர சபைக்கு உட்பட்ட உள் வீதிகளும் வெள்ள நீரில் மூழ்குவதை அவதானிக்க முடிகின்றது.
வெள்ள நீரால் சந்தைக்கு வரும் மக்களை சிரமங்களுக்குள் உள்ளாவதுடன் விபத்துக்கள் ஏற்படவும் காரணமாக அமைகின்றன.
அத்துடன் இச் சந்தையை சுற்றி உள் வீதிகளில் காணப்படும் வடிகான்கள் நீண்ட காலமாக தூர்வாரப்படாமையினால் நீர் தேங்கி வெள்ள நிலைமை ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இது தவிர குறித்த சந்தை மேற் கூரையும் எவ்வித கவனிப்பாரற்று காணப்படுவதனால் பழுதடைந்து உடைந்து விழும் நிலையில் காணப்படுவதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.
அத்துடன் சந்தைப் பகுதிக்குள் தொடர்ச்சியாக வெள்ளம் தேங்கி நிற்பதால் துர்நாற்றமும் வீசுவதுடன் சுகாதார அச்சுறுத்தலும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




