தமிழக வணிகர்களை ஈழ மண்ணில் முதலிடுவதற்கு ஊக்குவியுங்கள்- கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஜுவனிதா நாதன் வலியுறுத்தல்!
இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமது பொருளாதாரத்தை மீளக்கட்டமைப்பதில் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் தமிழக அரசினால் ஈழத்தமிழருக்கு உதவமுடியும் என நம்புகிறேன். அதற்கமைய தமிழக வணிகர்கள் இலங்கையின் தமிழ் பிரதேசங்களில் முதலிடுவதற்கு தமிழ்நாட்டு அரசு ஊக்கமளிக்கவேண்டும் என கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஜுவனிதா நாதன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழர்கள் உலகம் முழுவதும் பெரும் ஆளுமையாக வளர்ந்து வருகிறார்கள். அயலக தேசங்களில் தமிழ் மரபு, பண்பாடு மற்றும் மொழியைப் பாதுகாத்தும், வளர்த்தும் வருவதில் புலம்பெயர் தமிழர்களுக்கு முக்கிய பங்குண்டு.
அதுமாத்திரமன்றி வர்த்தக மற்றும் பொருளாதாரத் துறைகளிலும் தமிழர்கள் உலகம் முழுவதும் பெருமளவுக்கு முன்னேறி வருகின்றனர். இவ்வாறு பல வழிகளிலும், பல்வேறு துறைகளிலும் புலம்பெயர் தேசங்களில் தமிழர் மரபையும், திறனையும், ஆளுமையையும் கட்டிக்காத்து வளர்ந்துவரும் தமிழர்களுக்கு அங்கீகாரத்தை வழங்கும் வகையில் இந்த நிகழ்வை ஒருங்கிணைந்து நடாத்தி வருவதற்காக தமிழ்நாடு அரசுக்கு எனது பாராட்டுக்களைக் கூறிக்கொள்கிறேன்.
உலகம் முழுவதும் சுமார் 10 கோடி தமிழர்கள் வாழும் நிலையில், கனடா மிகப்பெரிய புலம்பெயர் தமிழ்ச்சமூகமாகக் காணப்படுகிறது. இந்நிலையில் கனேடிய தமிழர்களும் தமிழ்நாட்டு மக்களும் இணைந்து உலகத் தமிழ்ச்சமூகத்தின் பண்பாடு, மொழி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை வடிவமைப்பதில் அர்த்தமுள்ள பங்கை வகிக்க முடியும் என நான் நம்புகிறேன். அதேவேளை இதனூடாக நாம் வாழும் நாடுகளின் தேசிய அளவிலான பொருளாதார வளர்ச்சிக்கும் இதன்மூலம் பங்களிப்புச்செய்யமுடியும்.
அதேபோன்று தமிழ்நாடு பொருளாதார செயற்பாடுகளில் முன்மாதிரியாகவும், சிறப்பாகவும் வளர்ந்து வருகிறது. அதனை சாத்தியமாக்கிக் கொண்டிருக்கும் அரசாங்கத்துக்கு எனது பாராட்டை வெளிப்படுத்துகிறேன். அதேவேளை மறுபுறம் இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமது பொருளாதாரத்தை மீளக்கட்டமைப்பதில் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் தமிழக அரசினால் ஈழத்தமிழருக்கு உதவமுடியும் என நம்புகிறேன். அதற்கமைய தமிழக வணிகர்கள் இலங்கையின் தமிழ் பிரதேசங்களில் முதலிடுவதற்கு தமிழ்நாட்டு அரசு ஊக்கமளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதன்மூலம் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் தமது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பமுடியும் என்பதுடன் அதனூடாக தமிழ்நாடும் நன்மையடைய முடியும்.
இதற்கான நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கு கனேடிய தமிழர்கள் உட்பட புலம்பெயர் தமிழ்ச்சமூகங்கள் அனைத்தும் இணைந்து செயற்பட முன்வரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்றார்.