நுவரெலியா மாவட்டத்தில் கனமழை.!
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.
இன்று மதியம் முதல் மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது.
நீரேந்து பகுதிகளான மவுசாகலை, காசல்ரீ, கென்யோன், புரோட்லேன்ட், லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல, விமலசுரேந்திர, மேல் கொத்மலை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக நீர்த்தேக்கங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை எட்டி உள்ளது. அதேபோல் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. கென்யோன், புரோட்லேன்ட், லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல விமலசுரேந்திர, மேல் கொத்மலை ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் வழியாக நீர் வெளியேற்றப்படுகிறது.
இதன் காரணமாக மகாவலி கங்கை, களனி கங்கையின் கரையோர பகுதிகளில் வாழும் மக்கள் தாழ் நில பகுதியில் இருந்து வேறு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெருந்தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது.
மேலும், பண்ணையாளர்கள் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன் சிவனடிபாத மலை பகுதியில் மண் திட்டுகள் சரிந்து விழுந்ததால் உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் மலைக்கு செல்ல வேண்டாம் என ஹட்டன் வலய காவல்துறை தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாமிமலை ஓயா, மரே ஓயா, காட்மோர் ஓயா, சியத்தலகங்குல ஓயா, கெசல்கமு ஓயா, ஹட்டன் ஓயா, போடைஸ் ஓயா, டயகம பகுதியில் ஆரம்பிக்கும் மகாவலி கங்கை மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்வீழ்ச்சிகள், ஏனைய ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி துஷாரி தென்னகோன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


