யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மருதங்கேணியில் இராணுவ தேவைக்காக காணி ஒன்று சுவீகரிக்கப்பட இருந்த நிலையில் காணி உரிமையாளர், அரசியல், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பினால் அந்நடவடிக்கை என்று இடைநிறுத்தப்பட்டுள்ளது
இன்று காலை காணி அளவீடு செய்வதற்காக காணி உரிமையாளர் மற்றும் அயல் காணி உரிமையாளர்களை சமூக மளிக்குமாறு பிரதே செயலகம் அழைப்பு விடுத்திருந்தது.
இந்நிலையில் காணி உரிமையாளர், அயல் காணி உரிமையாளர்கள் என பலரும் வருகை தந்திருந்தனர்.
அங்கே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன், பருத்தித் துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஷ், மருதங்கேணி வட்டார பிரதேச உறுப்பினர் கிட்டு, நாகர்கோவில் வட்டரா உறுப்பினர் குறிஞ்சி, ஏனைய அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், நலன் விரும்பிகள், பொது அமைப்பு பிரதிநிதிகள், மருதங்கேணி வடக்கு, தெற்கு கிராம அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகள், என அனைவரும் இணைந்திருந்தனர்.
அவர்கள் இராணுவ தேவைக்காக அக்கானியை இராணுவத்துக்கு விற்க வேண்டாம் என காணி உரிமையாளரை வலியுறுத்தினர்.
இந்நிலையில் காணி உரிமையாளர் நீண்ட நேரமாக காணியை இராணுவத்திற்கு விற்பனை செய்வதற்கான முயற்சியிலிருந்தார்.
ஆனாலும் இறுதி நேரத்தில் தனது 30 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் இருக்கின்ற போதும், 20 ஏக்கர் காணியை மட்டும் அடையாளப்படுத்தி சுவீகரிக்கும் முயற்சியை ஏற்றுக் கொள்ளாத காணி உரிமையாளர் காணி அளவீடு செய்ய முடியாதென்று நில அளவைத் திணைக்களத்துக்கு கடிதம் மூலம் அறிவித்தார்.
இந்நிலையில் காணி அளவீடு நிறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து காணி உரிமையாளர், பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள், நில அளவையாளர்கள் குறித்த 10 வது விஜயபாகு படைப்பிரிவு வளாகத்தில் காணியை பார்வையிட சென்றபோது ஏற்கனவே இராணுவ தேவைக்காக குறித்த காணி அளவீடு செய்யப்பட்டுள்ளது என்றும், இராணுவத்திற்கு உரிமையான காணிக்குள் யாரும் செல்ல முடியாது என்று காணி உரிமையாளர், மற்றும் அதிகாரிகளை இராணுவம் திருப்பி அனுப்பியுள்ளனர்.
இதேவேளை குறித்த காணியானது உரிமையாளரின் அனுமதியின்றி உரிமையாளர் வெளிநாட்டிலிருந்த போது 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அளவீடு செய்யப்பட்ட நிலையிலேயே இன்று இறுதிப் படுத்துவதற்காக நில அளவை திணைக்களம் பிரதேச செயலகத்தினுடைய விடுத்த கோரிக்கைக்கு அமைவாக காணியை அளவீடு செய்வதற்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.










