உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

தமிழ் மக்கள் கொ*ல்லப்பட்டதைக் கூற பேராயர் கர்தினாலுக்கு தயக்கம் ஏன்?

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
17 பார்வைகள்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்காக நீதி கோரி இன்று வரை குரல் கொடுக்கும் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையும், கத்தோலிக்க சபையினரும், இந்த நாட்டில் தமிழ் மக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டனர் என்று கூறுவதற்குத் தயக்கம் காட்டுவது ஏன் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ”வலுசக்தி மற்றும் வாழ்க்கைச் செலவுப் பாதுகாப்புத் திட்டம்” தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
“கடந்த மே 27ஆம் திகதி பருத்தித்துறைமுனைப் பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற தந்தை, மகன் உட்பட நான்கு மீனவர்கள் காணாமல்போயுள்ளனர். அவர்களைக் கண்டுபிடிப்பதற்கான முறையான நடவடிக்கைகளை அரசு உரிய நேரத்தில் முன்னெடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட மீனவர் சமூகம் குற்றம் சாட்டுகின்றது. அவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அரசிடமிருந்து இதுவரை முறையான பதில் இல்லை. எனவே, அவர்களின் குடும்பத்தினருக்குப் பதில் அளிக்கும் வகையில் உண்மை என்ன என்பது கண்டறியப்பட வேண்டும்.

அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் கடந்த மே 18 அன்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில், இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக இனவழிப்பு நடந்தது என்றும், அதற்காக நாம் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக அவர் கூறிய இந்தக் கருத்துக்குச் சில கிறிஸ்தவ அமைப்புகளே கண்டனம் தெரிவித்திருந்தன.

மன்னார் மாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தமிழ் மக்களுக்கு நடந்தது இனவழிப்பு என்பதை வெளிப்படையாகக் கூறியிருந்தார். ஆனால், தற்போதைய கத்தோலிக்க சபை அதற்கான நீதியைக் கோருவதற்குத் தயாராக இல்லை. அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் முன்வைத்த கருத்தை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றோம்.

யாழ். மாவட்டத்தில் 1990ஆம் ஆண்டில் இராணுவத்தினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மயிலிட்டி மக்கள், 35 வருடங்கள் கடந்தும் இன்னும் தங்களின் சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். தமது நிலங்களை விடுவிக்கக் கோரி அவர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மயிலிட்டியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மக்களின் சொந்தக் காணிகளில் இராணுவத்தினர் குடியேறவும் இல்லை; ஆனால் அங்கு விவசாயத் தோட்டம் செய்கின்றனர். யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் சலூன்கள், முன்பள்ளிகள் மற்றும் விவசாயத் தோட்டங்களை நடத்தி, காய்கறிகளைச் சந்தையில் விற்கின்றனரே தவிர, மக்களின் காணிகளை விடுவிக்க மறுக்கின்றனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், பிரிகேடியர் பால்ராஜ் குறித்துப் பேசினார் என்பதற்காக நாடாளுமன்றத்துக்கு வெளியில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால், சொந்த மண்ணில் குடியேற முடியாமல் 35 வருடங்களுக்கும் மேலாக மக்கள் உறவினர் வீடுகளில் வாழும் அவல நிலை குறித்து எவரும் பேசுவதில்லை. எனவே, மாறி மாறி வரும் அரசுகள் பொய்களைக் கூறாமல், மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களின் சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

60 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

27 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

49 0 0