மரம் முறிந்து வீழ்ந்ததில் குடியிருப்பு முற்றாக சேதம்.!
நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் அடை மழை காரணமாக, மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட ரிக்காடன் பகுதியில் பாரிய மரம் ஒன்று குடியிருப்பு ஒன்றின் மீது வீழ்ந்ததில் வீடு முற்றாக சேதமடைந்துள்ளது.
சம்பவம் நேற்று காலை 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தொடர் மழையால் மண் தளர்வடைந்த நிலையில், வீட்டின் அருகில் இருந்த மரம் வேரோடு சாய்ந்து வீட்டின் மேல் வீழ்ந்துள்ளது. இதனால் வீட்டின் கூரை, சுவர்கள் மற்றும் வீட்டு உபகரணங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.
அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மரங்கள் முறியும் அபாயம் காணப்படுவதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் ரக்காடு கிராம பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் அதிக அளவில் பைனஸ் மரங்கள் உள்ளன. அவற்றை அகற்ற அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் உடன் முன்வர வேண்டும் என அப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுரவீர ஆராய்ச்சி மற்றும் கிருஷ்ணன் கலைச் செல்வி கவனம் செலுத்த வேண்டும்.

