மன்னாரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கண்டல்த் தாவர நடுகை
பூமி மற்றும் அதன் இயற்கை வளங்களின் நிலைத்தன்மையை உறுதி படுத்தும் நோக்கில், உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, டினோசா கண்டல் தாவர வளர்ப்பு நிலையத்தின் அனுசரணையுடன்,மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவின் ஒருங்கிணைப்பில், மன்னார் மாவட்ட செயலகம், மன்னார் பிரதேச செயலகம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, வன ஜீவராசிகள் திணைக்களம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்பில் , மன்னார் மாவட்டத்தில் 500 கண்டல் தாவரங்கள் நடும் நிகழ்வை இன்று வெள்ளிக்கிழமை (5) ஆரம்பித்து வைத்துள்ளனர்.
இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளர், மேலதிக மாவட்ட செயலாளர், உதவி மாவட்ட செயலாளர், அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர், மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையின் பொறுப்பதிகாரி, வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி, டினோசா கண்டல் தாவர வளர்ப்பு நிலையத்தின் முகாமையாளர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
கடலோர சூழலியல் அமைப்புகளைப் பாதுகாப்பதிலும், உயிரியல் பல்வகைமையை மேம்படுத்துவதிலும், காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளைத் தணிப்பதிலும் கண்டல் தாவரங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
இதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்குடன் இந்நிகழ்வு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
மேலும், இந்நிகழ்வின் மூலம் இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கான சமூகப் பொறுப்புணர்வு வலுப்படுத்த பட்டதுடன், எதிர்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான மற்றும் நிலையான சுற்றுச்சூழல் உருவாக்குவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது..