வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரு சீனர்கள் கைது.!
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கடத்தி வந்த, 45 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் இரண்டு வெளிநாட்டுப் பயணிகள் இன்று (05) வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 29 மற்றும் 42 வயதுகளையுடைய சீன நாட்டவர் எனவும், அவர்கள் இருவரும் வியாபாரிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்றையதினம் அதிகாலை 01.20 மணியளவில் சிங்கப்பூரிலிருந்து வருகை தந்த ‘சிங்கப்பூர் ஏயார்லைன்ஸ்’ நிறுவனத்திற்குச் சொந்தமான எஸ்.கியூ. 469 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இதன்போது, அவர்கள் கொண்டு வந்த 4 பயணப்பொதிகளுக்குள் மிகவும் நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த, சீனாவில் உற்பத்தியான 30,400 சிகரெட்டுகள் அடங்கிய 152 கார்ட்டூன்கள் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சீன வியாபாரிகளைக் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் தடுத்து வைத்து, இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.