உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வாக்குறுதிகளை என்.பி.பி. அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
31 பார்வைகள்

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்னர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா வலியுறுத்தியுள்ளார்.

எதுல்கோட்டையிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது தற்போதைய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் குறித்து அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் வர்த்தகத் துறையும் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது என்று குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், கடந்த இரண்டு வருடங்களில் இலங்கை ரூபாயின் மதிப்பு வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது என்றும் குற்றஞ்சாட்டினார்.

டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பை வலுப்படுத்துவதற்கு ஏற்றுமதி வருவாய் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற போதிலும், அதனை ஊக்குவிக்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் சாடினார்.

அமெரிக்கா தனது இறக்குமதிகளுக்கு 12.5 % வரி விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளமையால் இலங்கையின் ஆடை ஏற்றுமதித் துறை பாரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது என்றும், மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழல் காரணமாக தேயிலை ஏற்றுமதியும், வெளிநாட்டுப் பண அனுப்புதல்களும் வீழ்ச்சியடைந்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஐரோப்பிய நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ள நிலையில், மாற்று நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க அரசு தவறியுள்ளது என்று குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசிடம் பொருளாதாரத்தை மீட்கக்கூடிய திறமையான அல்லது அனுபவமிக்க குழுவினர் எவரும் இல்லை என்றும் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக மக்களுக்கு வழங்கப்படும் மானியங்களை அரசு நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரித்த ஹர்ஷன ராஜகருணா, இதனால் மின்சாரக் கட்டணம், எரிபொருள் விலை, நீர்க் கட்டணம் மற்றும் எரிவாயு விலை என்பன மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்றும் கூறினார்.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயரும் அதேவேளை, மக்களின் வருமானம் அதிகரிக்காமல் செலவுகள் மட்டுமே அதிவேகமாக உயர்ந்து வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில், நாட்டைச் சூறையாடவோ, வேலைநிறுத்தங்களை நடத்தவோ அல்லது வன்முறைகளில் ஈடுபடவோ ஐக்கிய மக்கள் சக்தி முற்படாது என்று உறுதியளித்த அவர், பொறுப்புணர்வுடன், நாகரிகமான முறையில் மக்கள் சார்பாகத் தங்களது கடமைகளைச் செய்ய அர்ப்பணிப்புடன் உள்ளது என்றும் தெரிவித்தார்.

‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட சொத்துக்களைப் புனரமைப்பதற்காக அரசால் உருவாக்கப்பட்ட நிதி கணக்கு சட்டபூர்வமற்ற ஒன்று என்பது நாடாளுமன்ற அரசாங்க நிதிக் குழுவுக் கூட்டத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் வெளிப்படுத்தினார்.

இந்நிதிக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பொதுமக்களிடமிருந்து பெருமளவிலான பணம் திரட்டப்பட்ட போதிலும், இதுவரை அதில் ஒரு ரூபாவேனும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகச் செலவிடப்படவில்லை என்றும், பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் தற்காலிக முகாம்களிலேயே வாழ்வதுடன் சேதமடைந்த வீதிகள், பாலங்கள் எவையும் இதுவரை புனரமைக்கப்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என மேடைகளில் கூறப்பட்ட போதிலும், தற்போது அதனை நடத்துவதற்கு அரசு எவ்வித தயார்நிலையும் காட்டவில்லை என்று தெரிவித்த அவர், அரசு நாட்டில் ஒரு சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த முற்படுகின்றது என்றும் குறிப்பிட்டார்.

அரசியல் சாசனத்தை மீறி தன்னிச்சையான நியமனங்களை அரசு மேற்கொண்டு வருகின்றது என்றும், ஜே.வி.பியின் தலைமையகமான ‘பெலவத்தை’ கட்சி காரியாலயப் பிரதிநிதிகளே இன்று சுயாதீன ஆணைக்குழுக்களைக் கட்டுப்படுத்துகின்றனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மாகாண ஆளுநர்களுக்கு எவ்வித அதிகாரமும் இன்றி பெலவத்தை காரியாலயத்தின் உத்தரவின்படியே மாகாண சபைகள் நிர்வாகம் செய்யப்படுவதால் சில ஆளுநர்கள் பதவி விலக நேரிட்டுள்ளது என்று கூறிய அவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகளை விடவும் கட்சிப் பிரதிநிதிகளின் தலையீடே மேலோங்கி நிற்கின்றது என்றும் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற மகா பரிமாண ஊழல்கள் மட்டுமன்றி, தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசின் கீழ் இடம்பெற்றதாகக் கூறப்படும் கொள்கலன் மோசடி, நிலக்கரி மோசடி உள்ளிட்ட ஊழல்களுக்கு எதிராகவும் சட்டம் துரிதமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரினார்.

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான தனிநபர்களுடன் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் இணையாது என்றும், கொள்கை ரீதியாகக் கட்சிகளுடனேயே கூட்டணி அமைப்போம் என்றும் தெளிவுபடுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தங்களது முகாம்களைப் பலப்படுத்தி, பொதுவான ஒரு வேட்பாளரைக் களமிறக்குவதற்கு இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

76 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0