உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பயங்கரவாதக் கொள்கைகளை மீண்டும் விதைக்க எவருக்கும் உரிமை இல்லை.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
26 பார்வைகள்

முப்பது வருட கால யுத்தத்தால் பேரழிவுகளைச் சந்தித்த இந்த நாட்டில், பயங்கரவாதக் கொள்கைகளை மீண்டும் சமூகத்தில் விதைப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை என்றும், இவ்வாறான விடயங்களில் அரசு மௌனம் காப்பது ஆபத்தானது என்றும் சர்வஜன அதிகாரம் கட்சியின் சர்வஜன இளைஞர் முன்னணி எச்சரித்துள்ளது.

கொழும்பிலுள்ள சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த சர்வஜன இளைஞர் முன்னணியின் உறுப்பினர் வாசுர ஆரியரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“முப்பது வருட கால யுத்தத்தால் இந்த நாடு பெருமளவிலான உயிர்களையும் சொத்துக்களையும் இழந்தது. நாட்டின் இறைமைக்கு எதிராகப் போராடிய பயங்கரவாத அமைப்பு தோற்கடிக்கப்பட்டு 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், மீண்டும் அந்தப் பயங்கரவாதக் கொள்கையின் தழும்புகள் துளிர்விடுவது கவலையளிக்கின்றது.

பயங்கரவாதக் கொள்கைகளையோ அல்லது அந்த அமைப்பின் தாரக மந்திரங்களையோ மீண்டும் மேடை போட்டுப் பேசுவதற்கு இந்நாட்டின் எந்தவொரு பிரஜைக்கும் உரிமையில்லை. ஜனநாயக ரீதியில் தமது உறவுகளை நினைவுகூருவதை யாரும் மறுக்கவில்லை. ஆனால், அதன் பெயரால் பயங்கரவாதத்தை மீளுருவாக்கம் செய்யும் செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

வெள்ளவத்தையில் முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தல் நிகழ்வுகள் என்பது இறந்தவர்களை நினைவுகூரும் எல்லைகளைத் தாண்டி, பயங்கரவாதக் கருத்துருவாக்கங்களை மேலோங்கச் செய்யும் ஒன்றாகவே அமைந்திருந்தது. இவ்வாறான நிகழ்வுகளுக்கு அரசு காட்டும் மென்போக்கும் மௌனமும், பிரிவினைவாதச் சிந்தனை மீண்டும் தலைதூக்க உரமிடுவதாகவே அமைகின்றது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நல்லிணக்கத்தைப் பற்றிப் பேசினாலும், நடைமுறையில் இத்தகைய பயங்கரவாதக் கருத்துக்கள் பரப்பப்படுவதைத் தடுக்கத் தவறியுள்ளார்.

வடக்கு மற்றும் தெற்கு மக்களுக்கிடையே முப்பது வருடங்களாக நிலவிய இருண்ட சூழலால், இன்று ஒருவித அந்நியத்தன்மையும் அச்சமும் காணப்படுகின்றது. இதனைப் போக்கி, பொதுவான ஜனநாயகக் கட்டமைப்புக்குள் அவர்களை உள்வாங்க வேண்டியது அரசின் பொறுப்பாகும்.

மாறாக, பிரிவினைவாதச் சிந்தனைகளைப் பிரபல்யப்படுத்தும் செயற்பாடுகளுக்கு மறைமுகமான ஒத்துழைப்பை வழங்குவது, எதிர்காலத் தலைமுறையினருக்கு மீண்டும் ஒரு இருண்ட காலத்தையே பரிசளிக்கும்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்கள் தயாரித்த வெசாக் கூடு சிதைக்கப்பட்டமையானது, இந்நாட்டில் மீண்டும் இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது.

எமது நாட்டு இளைஞர்கள் இன்று எதிர்பார்ப்பது பிரிவினைவாதத்தை அல்ல, மாறாக ஒன்றிணைந்த இலங்கையையே ஆகும். தேசியவாதம் என்பது இனவாதத்தோடு கலக்கப்படக் கூடாத ஒன்று. தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி, நாட்டையும் மக்களையும் ஒன்றிணைக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், பிரிவினைவாதச் சிந்தனைகள் மீண்டும் வலுப்பெறுவது தேசிய பாதுகாப்புக்கும், நாட்டின் நிலையான அபிவிருத்திக்கும் பெரும் சவாலாக அமையும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

76 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0