காங்கேசன்துறையை வந்தடைந்த சிவகங்கை கப்பல்.!
இன்று காலை நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்த, சுபம் நிறுவனத்தின் சிவகங்கை கப்பலானது காங்கேசன்துறையை வந்தடைந்தது.
காலை 7.55 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்த குறித்த கப்பல் பி.ப 12.55 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்தது. பின்னர் மீண்டும் 2.30 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்தது.
இதன்போது இந்தியாவில் இருந்து 93 பயணிகள் இலங்கைக்கு வந்ததுடன், 79 பயணிகள் இலங்கையில் இருந்து இந்தியாவை நோக்கி பயணித்தனர்.
குறித்த கப்பலானது சில வாரங்களுக்கு முன்னர் காங்கேசன்துறையில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி பயணித்த நிலையில் அசாதாரண காலநிலை காரணமாக சேதமடைந்தது. இதனால் ஒரு சில வாரங்கள் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடவில்லை.
அதனைத் தொடர்ந்து சிவகங்கை கப்பலானது மீண்டும் இன்று முதல் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


