வதந்திகளுக்குச் செயலால் பதிலடி – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு!
இந்த நிகழ்வில், வடக்கு – கிழக்கு பிரதம சங்கநாயக்கரும் மடுகந்த சிறி தலாதா விகாராதிபதியுமான வணக்கத்துக்குரிய ஆனந்த தேரர், வடக்கு – கிழக்கு உதவி சங்கநாயக்கர் அட்டமகஸ்கட கல்யான திஸ்ஸ தேரர், பிரதி அமைச்சரும் வன்னித் தேர்தல் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க, வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு. ம.பற்றிக் டிறஞ்சன், வவுனியா மாவட்டச் செயலாளர், வவுனியா மாவட்ட மேலதிகச் செயலாளர், வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவர்களுடன் வன்னிப் பிராந்தியப் பிரதிப் பொலிஸ்மா அதிபர், 56ஆவது படையணியின் பிரிகேட் கொமாண்டர், வவுனியா மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர், வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச சபையின் தவிசாளர் ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்த வெசாக் உற்சவத்தில், தர்ம போதனை, மிகப் பிரமாண்டமான வெசாக் ஊர்வலம் விருந்தினர்களின் பங்கேற்புடன் சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரம் நடைபெற்றது.
தொடர்ந்து வெசாக் கூடுகளின் கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சுமார் 5 ஆயிரம் பொதுமக்கள் வரையில் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர் நா.வேதநாயகன் தனது உரையில் மேலும் குறிப்பிடுகையில்,
கௌதம புத்தர் பிறந்ததும், ஞானம் பெற்றதும், பரிநிர்வாணம் அடைந்ததும் ஆகிய மூன்று மகத்தான நிகழ்வுகளும் இந்தப் பௌர்ணமி நாளிலேயே நிகழ்ந்தன.
இங்கு ஏற்றப்படும் ஒவ்வொரு வெசாக் கூடும், அகல் விளக்கும் வெறும் அலங்காரங்கள் அல்ல, அவை அமைதியின், அன்பின் ஒளியை இவ்வுலகுக்குப் பரப்பும் சின்னங்களாகும்.
சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகளைப் புறந்தள்ளி, நாம் அனைவரும் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்துள்ளோம் என்பதை இந்த நிகழ்வு உலகுக்குப் பறைசாற்றுகின்றது.
பழியைப் பழியால் வென்றுவிட முடியாது. அன்பும், மன்னிப்பும், சமாதானமுமே அந்தச் சங்கிலியை அறுக்கும்.
புத்தரின் ‘சரியான பேச்சு’ என்ற போதனை இந்த நவீன டிஜிட்டல் யுகத்துக்கு மிகவும் அத்தியாவசியமானது.
ஒரு வார்த்தையைப் பேசுவதற்கு அல்லது பகிர்வதற்கு முன்னர் அது உண்மையா, அதனால் யாருக்கேனும் பாதிப்பு ஏற்படுமா என்பதை ஆராய்வது அனைவரினதும் பொறுப்பாகும்.
புத்தர் கருணையைப் போதித்தார். இந்து சமயம் ‘அன்பே சிவம்’ என்கிறது,கிறிஸ்தவம் ‘உன் அயலானை உன்னைப் போல் நேசி’ என்கிறது, இஸ்லாம் இரக்கத்தையும் கருணையையும் போற்றுகின்றது. வழிபடும் முறைகளும் மொழிகளும் வேறாக இருக்கலாம்; ஆனால் எல்லா மதங்களும் இறுதியில் போதிப்பது அன்பை மட்டுமே.











