உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மக்களை ஆட்சியின் அங்கமாக்குவதே ‘பிரஜா சக்தி’! – பிரதமர் ஹரிணி தெரிவிப்பு

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
25 பார்வைகள்

‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டமானது தற்போதைய மக்கள்நேய அரசாங்கத்தின் ஜனநாயகப் பண்புகளை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய பகுதி என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘பிரஜா சக்தி’ வறுமை ஒழிப்பு தேசிய இயக்கத்தின் ‘ஆயிரம் கிராமங்களில், ஆயிரம் பணிகள்’ திட்டத்தின் கொழும்பு மாவட்ட ஆரம்ப நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கஸ்பாவ, நாம்பமுணுவ கிராம உத்தியோகத்தர் பிரிவில் தரிசுநிலங்களாகக் கிடந்த வயல்களை மீண்டும் பயிர்செய்யும் ‘பிரஜா சக்தி’ அபிவிருத்தி சபையின் வேலைத்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே பிரதமர் இக்கருத்தைக் கூறினார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர்,

“அரசாங்கத்தின் மக்கள்நேய ஆட்சியின் ஜனநாயகப் பண்புகளை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய சந்தர்ப்பமாக இந்த ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தை அடையாளப்படுத்தலாம்.

மக்கள்நேய ஆட்சி என்பது அரசாங்கம் மாத்திரம் தனித்துச் செயற்படுவதல்ல; மாறாக அது அரசாங்கம், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய அனைத்துத் தரப்புகளும் இணைந்து மேற்கொள்ளும் ஒரு கூட்டு முயற்சியாகும் என்பதையே இத்திட்டத்தின் பெயர் உணர்த்துகின்றது.

தேர்தல் காலங்களில் மாத்திரம் ஆட்சியாளர்கள் மக்களுடன் இணைந்து இயங்குவதல்ல, மாறாக மக்களை ஆட்சியின் ஓர் அங்கமாக மாற்றிச் செயற்பாட்டுரீதியாகவே அவர்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளும் எண்ணக்கருவை, இந்த ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தின் ஊடாகச் சகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் ஸ்தாபித்திருக்கின்றோம்.

பெயரளவிலான வலுவூட்டல் திட்டங்கள் இதற்கு முன்பும் நாட்டில் இருந்தன. ஆனால், அவற்றின் மூலம் மக்களுக்கு உரிய பலன்கள் கிடைக்கவில்லை; அரசியல்வாதிகள் மட்டுமே அதன் மூலம் வலுவடைந்தனர்.

பிறரைச் சார்ந்திருக்கும் மனநிலையிலிருந்து விடுபட்ட எமது நாட்டு மக்கள், கடந்த 2024ஆம் ஆண்டில் மேற்கொண்ட அரசியல் மாற்றத்தை அடுத்து, நாட்டைத் தங்களது சொந்த உழைப்பால் கட்டியெழுப்பும் பொறுப்பைத் தம் கைகளில் எடுத்து இந்த வேலைத்திட்டத்துடன் இணைகின்றார்கள்.

பொருளாதார வலுவூட்டலை இலக்காகக் கொண்டு, தமது பிரதேசத்திற்குரிய தனித்துவமான பொருளாதார முறையைக் கண்டறிந்து அதனைக் கட்டியெழுப்புவதை இந்தத் திட்டங்கள் மூலம் வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும்.

உலக அரசியல் பின்னணியில் ஏற்பட்டிருக்கும் தற்போதைய நெருக்கடி நிலைமைகளில், பொருளாதாரப் பாதுகாப்பிற்காகத் தன்னிறைவு பெற்ற வாழ்க்கை முறையானது எந்தவொரு நாட்டு மக்களுக்கும் மிக முக்கியமானதாக அமைகின்றது.

நாம் உள்நாட்டில் இறக்குமதி செய்ய வேண்டிய இன்றியமையாத பொருட்களை மாத்திரம் இறக்குமதி செய்வதோடு, உற்பத்தி செய்யக்கூடிய அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் எமது நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும்.

அதன் மூலம், உலகளாவிய சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய பலமான பொருளாதாரத்தை, உணவுப் பாதுகாப்பின் ஊடாக நாம் கட்டியெழுப்ப வேண்டும்.

அரசாங்கம், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பைப் பேணுவதன் மூலம், இந்தத் திட்டங்களின் ஊடாக மக்களின் வறுமை முழுமையாக ஒழிக்கப்படும். அப்போது ஒரு வளமான நாடு உருவாவதோடு, ஒட்டுமொத்த மக்களுக்கும் இயல்பாகவே அழகானதொரு வாழ்க்கையும் உருவாகும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

38 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

55 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

62 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்…

22 0 0