ஹட்டன் இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது!
ஹட்டன் – டிக்கோயா நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் வயோதிபத் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொகவந்தலாவை போலீசாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், பொகவந்தலாவை – பெற்றசோ பெருந்தோட்டப் பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து இன்று இந்த விசேட கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் டிக்கோயா நகரின் வர்த்தக நிலையமொன்றில் வைத்து வயோதிபத் தம்பதியினர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முடுக்கிவிட்டிருந்த போலீஸார், சிசிடிவி (CCTV) காட்சிகளின் அடிப்படையில் பிரதான சந்தேக நபரை அடையாளப் படுத்தினர்.
அவரைக் கைது செய்வதற்கு உதவுமாறு பொதுமக்களிடமும் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையிலேயே, தலைமறைவாகியிருந்த சந்தேக நபர் போலீசாரினால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.